ஆண்டுதோறும் அகில இந்திய அளவில் மருத்துவ கலந்தாய்வு முதலில் தொடங்கும். அதன் பிறகே, அந்தந்த மாநிலங்களில் மருத்துவ கலந்தாய்வு தொடங்கி நடக்கும். இதில் மாநிலங்களில் உள்ள 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும். இதன்படி, நடப்பாண்டு (2023-24) தமிழ்நாட்டில் இருந்து 766 எம்பிபிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில் அனைத்து வகையான கலந்தாய்வு சுற்றுகளும் நடந்து முடிந்துள்ளது. கலந்தாய்வு நிறைவு பெற்ற நிலையில், 86 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.
தமிழ்நாட்டில் 37 மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. இதில் மதுரை மருத்துவக்கல்லூரியில் 3, ஸ்டான்லி, கோவை, ஓமந்தூரார் கல்லூரிகளில் தலா 2, கோவை ஈ.எஸ்.ஐ.சி.,கரூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், நீலகிரி, திருவள்ளூர், திருப்பூரில் தலா 1 என 16 எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்பப்படவில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் 3 இடங்களும், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 50 இடங்களும், சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் 17 இடங்களும் என்று மொத்தம் 86 எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்பப்படவில்லை.
இதுதவிர, 279 பிடிஎஸ் இடங்களும் நிரப்பப்படாமல் உள்ளது. கடந்த 2021-22ம் கல்வியாண்டிற்கு முன்பு வரை, அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்படும் இடங்கள் நிரப்பப்படாவிட்டால், மீண்டும் அந்தந்த மாநில அரசுகளுக்கு வழங்கப்படும். தற்போது இந்த நடைமுறையும் ரத்து செய்யப்பட்டு விட்டது. இந்த வகையில், 86 மருத்துவர்களை உருவாக்கும் நோக்கில், தமிழ்நாடு ஒதுக்கி கொடுத்த வாய்ப்பை வீணடித்துள்ளது ஒன்றிய அரசு. கடந்தாண்டு இதேபோல் 6 மருத்துவர் படிப்புகள் வீணாக்கப்பட்டது.
நடப்பாண்டில் இது 86 என்ற அளவில் உயர்ந்திருப்பது, சமூக மேம்பாட்டு ஆர்வலர்கள் மத்தியில் பெரும் குமுறலை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முக்கிய காரணம், தேசிய மருத்துவ ஆணையத்தின் தவறான மாணவர் சேர்க்கை கொள்கை தான் என்கின்றனர் அவர்கள். 2020-21ம் ஆண்டு வரை, அகில இந்திய தொகுப்புக்கு வழங்கப்பட்ட இடங்களை நிரப்ப, ஒன்றிய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநர் அலுவலகத்தில் இரண்டு கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டது. அந்த கலந்தாய்வுகளில் நிரப்பப்பட்ட இடங்களை தவிர மீதியுள்ள இடங்கள், மீண்டும் மாநில அரசிடமே ஒப்படைக்கப்படும்.
அந்த இடங்களுக்கு மாநில அளவில் கடும் போட்டி இருக்கும் என்பதால் சேர்க்கை குழு, மாணவர்களை எளிதாக நிரப்பி விடும். ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பை காரணம் காட்டி, ஒதுக்கீட்டு இடங்களுக்கு 4 கட்ட கலந்தாய்வை ஒன்றிய அரசு நடத்துகிறது. நான்காம் கட்ட கலந்தாய்வுக்கு பிறகு, மருத்துவ இடங்கள் காலியாக இருந்தால், அவை யாருக்கும் பயன்படாது என்பதே உண்மை. ஒன்றிய அரசின் அதிகார மெத்தனம், நடப்பாண்டு இந்த உண்மையை உறுதி செய்துள்ளது என்கின்றனர் அவர்கள்.
மாண்புடன் மருத்துவம் பயின்று மனிதகுலம் காக்கும் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள ஆர்வமுடன் காத்திருக்கின்றனர் ஆயிரமாயிரம் மாணவச்செல்வங்கள். மருத்துவம் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு எத்துனை மகத்துவம் சேர்க்கும் என்பது ஒன்றிய அரசு அறியாத ஒன்றல்ல. இப்படிப்பட்ட நிலையில், தமிழ்நிலத்தில் 86 மருத்துவர்கள் உருவாகும் வாய்ப்பை 15 சதவீத ஒதுக்கீடு என்ற பெயரில் தட்டிப்பறித்து வீணடித்துள்ளது ஒன்றிய அரசு. இதை திரும்ப வழங்க கேட்டு கடிதம் எழுதியுள்ளது தமிழ்நாடு அரசு. ஏற்கனவே நீட் தேர்வை அறிமுகப்படுத்தி ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் மருத்துவர் கனவை நிர்மூலமாக்கிய ஒன்றிய அரசு, இதனை கனிவுடன் பரிசீலிக்குமா? என்பதை காத்திருந்து பார்ப்போம்….