விருத்தாசலம்: விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு முஸ்லிம்கள் சீர்வரிசை எடுத்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம், ஆயியார் மடத்தில் சுவர்ண கணபதி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
இப்பகுதியில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் சூழ்நிலையில் சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் நவாப் ஜாமியா மஸ்ஜித் முத்தவல்லி முஸ்தபா தலைமையில் முஸ்லிம்கள் மேளதாளங்கள் முழங்க கும்பாபிஷேகத்திற்கு தேவையான சீர்வரிசை பொருட்களை நேற்றுமுன்தினம் இரவு கொண்டு சென்றனர்.
விருத்தாசலம் நகர்மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ், கவுன்சிலர் கருணா மற்றும் கோயில் விழா குழுவினர் சீர்வரிசை பொருட்களை பெற்றுக்கொண்டனர். கோயில் கும்பாபிஷேகத்திற்கு முஸ்லிம் மதத்தினர் சீர் கொண்டு வந்த இச்சம்பவம் பொதுமக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.