நாகர்கோவில்: குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜவில் இணைந்தார். அதன் பிறகு இன்று முதல்முறையாக குமரி மாவட்ட பாஜ அலுவலகத்திற்கு வந்தார். அவருக்கு நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். பின்னர் விஜய தரணி நிருபர்களிடம் கூறியதாவது: காங்கிரசில் பெண்களுக்கு மரியாதை இல்லை. பாஜவில் எனக்கு பதவி கண்டிப்பாக கொடுப்பார்கள்.
விரைவில் அங்கீகாரம் கொடுப்பார்கள். அதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். பெண்களுக்கு எந்த சீட் கொடுத்தாலும் சரி, பதவிகள் கொடுத்தாலும் சரி.. அதற்கு 2 விஷயங்கள் மையமாக இருக்கும். ஒன்று பெண்களை அங்கீகாரப்படுத்தும். அதிகாரப்படுத்தும் முயற்சியாக இருக்கும். மற்றொன்று பெண்கள் களப் பணியாற்றும் தளத்தை உருவாக்குவார்கள். அதுதான் பாஜவின் சீரிய தன்மை. அதை விரைவில் செய்வார்கள்.
பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்த நாங்கள் வந்துள்ளோம். எந்த சுயநலமும் இல்லாமல் பிரதமர் மோடி ஆட்சி நடத்தி வருகிறார். மக்கள் பணி மட்டுமே பிரதான பணியாக நினைக்க கூடியது பாஜதான். மக்கள் பணி ஆற்றுவதற்காக சுயநலம் இல்லாமல் பணியாற்ற இணைந்துள்ளேன். சாமானிய மக்கள் பதவிக்கு வர வேண்டும். நான் சாமானிய பெண். என்னை உயர்த்த காங்கிரஸ் நினைக்கவில்லை. அதே நேரம் அவர்களது குடும்ப வாரிசுகளை தலைவர் ஆக்குவார்கள்.
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியிலும் வாரிசுக்குதான் சீட்டு கொடுத்து இருக்கிறார்கள். இந்த 3 ஆண்டுகளில் ஏதாவது பணிகள் நடந்திருக்கிறதா? எதுவும் செய்யவில்லை. விளவங்கோடு சட்டசபை தொகுதியில் பாஜ வேட்பாளராக போட்டியிடுவீர்களா? என்று கேட்கிறீர்கள். ஆனால் நான் எம்எல்ஏ பதவிக்கு போட்டியிட போவதில்லை. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட கட்சி தலைமை முடிவு செய்தால் போட்டியிடுவேன்
இவ்வாறு அவர் கூறினார்.
குஷ்பு கூறியதன் அர்த்தம் தெரியவில்லை: விஜய தரணி மேலும் கூறுகையில், தமிழக அரசு மகளிர் உரிமைத்தொகை தருவதை வரவேற்கிறேன். ஆனால் தாலிக்கு தங்கம் திட்டம் ஜெயலலிதாவால் கொண்டு வந்த காரணத்தால் அதை நிறுத்தி உள்ளார்கள். மகளிர் உரிமைத்தொகை அனைத்து பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும். மகளிர் உரிமைத் தொகையை பிச்சை காசு என்று குஷ்பு கூறி இருப்பதாக கேட்கிறீர்கள். என்ன அர்த்தத்தில் அவர் பேசினார் என்று எனக்கு தெரிய வில்லை என்றார்.