விருதுநகர்: வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் நடந்து வரும் இரண்டாம் கட்ட அகழாய்வில் சிவப்பு நிற திரவம் பூசிய சுடுமண்ணால் ஆன பானை கண்டெடுக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணி கடந்த ஏப்ரல் மாதம் துவங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 16 குழிகள் தொண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. தோண்டப்பட்ட குழிகளில் இதுவரை சங்கு வளையல்கள், தங்க ஆபரணங்கள், செப்பு நாணயங்கள், கண்ணாடி மணிகள், சுடுமண்ணால் ஆன மனித பொம்மை, புகை பிடிப்பான், யானை தந்தத்தால் ஆன பகடை உட்பட 3750 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தற்போது தோண்டப்பட்ட குழியில் சிவப்பு நிற திரவம் பூசிய சுடுமண்ணால் ஆன பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் கூறுகையில், ‘விஜயகரிசல்குளம் இரண்டாம் கட்ட அகழாய்வில் அதிகளவில் சுடு மண்ணால் ஆன பானைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் சாதாரணமான பானைகளாகவே கிடைத்தன. ஆனால், தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள பானையில் சிவப்பு நிறத்தில் திரவம் பூசப்பட்டுள்ளது’ என்றார்.