Saturday, July 27, 2024
Home » ‘நான் அந்த மாதிரி ஆள் கிடையாது…’ ஒரு பார்வை பார்த்த வானதி பல்டியடித்த அண்ணாமலை

‘நான் அந்த மாதிரி ஆள் கிடையாது…’ ஒரு பார்வை பார்த்த வானதி பல்டியடித்த அண்ணாமலை

by Karthik Yash

கோவை பாராளுமன்ற தொகுதியில் பாஜ வேட்பாளர் அண்ணாமலை, மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான கிராந்திகுமார் பாடியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர், அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியது: கோவையின் காவல் தெய்வம் கோனியம்மன். மக்கள் நன்றாக, இன்பமாக, வளர்ச்சியோடு இருக்க வேண்டும் என்று கோனியம்மன் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டுதான் வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். எங்களை பொருத்தவரை நாங்கள் ஜெயிக்க வேண்டும் என சாமியிடம் வேண்டிக்கொள்ளவில்லை. இவ்வாறு அண்ணாமலை கூறியதும் அருகில் இருந்த வானதி சீனிவாசன் எம்எல்ஏ பதறிப்போய் அண்ணாமலையை ஒருவிதமாக பார்த்தார்.
அதை பார்க்கும்போது, ‘‘என்னா விளையாட்டு காட்டுறாங்க… எப்படியெல்லாம் சோதிக்கிறாங்க…’’ என்கிற நடிகர் வடிவேலு டயலாக்கை நினைவுப்படுத்தியது. வானதி சீனிவாசனின் பார்வையை பார்த்து சுதாரித்துக்கொண்ட அண்ணாமலை, ‘‘கோவை மக்கள் நன்றாக இருக்க வேண்டும். நான் அந்த மாதிரி ஆள் கிடையாது. அண்ணாமலை ஜெயிக்கனும்னு மனு கொடுக்கிற ஆள் கிடையாது. கோவை மக்களும், கோனியம்மனும் முடிவு எடுப்பார்கள்’’ என கூறி சமாளித்தார். கடந்த சில நாட்களாகவே அண்ணாமலை ஏதாவது ஒன்றை உளறிவிட்டு வானதியை திரும்பி பார்ப்பதும், அதற்கு வானதி தலையாட்டலாமா? வேண்டாமா? என்று ஒருவித பார்வை பார்ப்பதும் வாடிக்கையாக வருகிறது.

* தங்கம் விலை ஏறிப்போச்சு… கேள்வி கேட்ட நிருபருடன் அண்ணாமலை வாக்குவாதம்: பதில் தெரியலையா? சப்ஜெக்ட் தெரியலையா?
கோவை தொகுதி பாஜ வேட்பாளர் அண்ணாமலை கோவையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது, ஒரு நிருபர், ‘‘தங்கம் விலை ரூ.50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தொடர்ந்து உயர்ந்துகொண்டே போகிறது. தங்கத்துக்கான இறக்குமதி வரி 11 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தி உள்ளனர். அதை 4 சதவீதமாக குறைத்தால், ரூ.5000 வரை தங்க விலை குறையும். ஒன்றிய அரசு நினைத்தால் இதை செய்ய முடியும்’ என்று கேட்டார். அதற்கு என்ன பதிலை சொல்வது என திணறிய அண்ணாமலை ஒரு வழியாக ‘அண்ணே…’ என சூடாகி பேச தொடங்கினார். ‘‘ஒரு சப்ஜெக்ட் தெரியாமல் கேள்வி கேட்காதீர்கள்’’ என்றார். அப்போதும் அந்த நிருபர் தொடர்ந்து அந்த கேள்வியை கேட்டுக்கொண்டே இருந்தார். ஆனால் தொடர்ந்து திணறிய அண்ணாமலை, ‘‘ஒரு நிமிஷம்… ஒரு நிமிஷம்…’’ எனக்கூறி தட்டிக்கழித்தார். ‘‘எகனாமிக்ஸ் புரிஞ்சா கேள்வி கேளுங்க… கண்டதெல்லாம் கேட்கக்கூடாது. தங்க இறக்குமதி பாலிசி என்ன? சப்ளை டிமாண்ட் என்ன? அத தனியா பேசுவோம். தங்க இறக்குமதி, ஏற்றுமதி பாலிசி பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?’’ என்று நிருபரை சாடினாரே தவிர கடைசி வரை அந்த கேள்விக்கு பதில் கூறாமல் நழுவிச்சென்று விட்டார். உடன் இருந்த வானதி சீனிவாசன் எம்எல்ஏவும், ‘‘இது பற்றி தனியா பேசிக்கொள்ளலாம்’’ என்று கூறி தட்டிக்கழித்தார்.

* ‘அதிமுக வேட்பாளரிடம் மன்னிப்பு கேட்க முடியாது’
கோவையில் நேற்று முன்தினம் பேசிய அண்ணாமலை, ‘கோவை தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் கடந்த 2002ம் ஆண்டு தனது தந்தை கோவிந்தராஜின் எம்எல்ஏ கோட்டாவில் கல்லூரியில் சேர்ந்ததார். நான் 2 தகரப்பெட்டியுடன் கோவைக்கு வந்தேன்’ என்று அண்ணாமலை கூறியிருந்தார். அதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், ‘‘தந்தை கோவிந்த்ராஜ் 1991 முதல் 1996 வரை எம்எல்ஏவாக இருந்தார். அப்போது எனக்கு 11 வயது. நான் 2002ம் ஆண்டு கல்லூரியில் சேருவதற்கு முன்பே எனது தந்தை இறந்துவிட்டார். தந்தையின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அண்ணாமாலை பேசி இருக்கிறார். இறந்துபோன ஒருவர் எப்படி கல்லூரியில் இடம் வாங்கி தர முடியும். அண்ணாமலை கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்றார். இதற்கு நேற்று பதிலளித்த அண்ணாமலை, ‘‘நான் கூறியது என்னோட கருத்து. நான் மன்னிப்பு கேட்க முடியாது. அதற்கு அவசியமே இல்லை’’ என்று கூறி உள்ளார்.

* வாட்ஸ் அப், டிவிட்டரில் பேட்டி கொடுத்தால் போட்டியா? பாஜவை கலாய்த்த எஸ்.பி.வேலுமணி
பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று முன் தினம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: திமுகதான் நம் போட்டி. பாஜ வாட்ஸ் அப், செல்போனில் ஐ.டி. விங் வைத்துக்கொண்டு அரசியல் செய்து வருகின்றனர். பாஜ எங்களுக்கு ஒரு ஆளே கிடையாது. பாஜ கணக்கிலேயே இல்லை. அவர்களை பற்றி கவலையும் இல்லை. அவர்கள் போட்டிக்கு வர முடியாது. எப்படி போட்டிக்கு வர முடியும். வாட்ஸ் அப், டிவிட்டரில் பேட்டி கொடுத்தால் போட்டிக்கு வந்துவிட முடியுமா?. பாஜ ஒவ்வொரு ஊரிலும் எவ்வளவு ஓட்டு வாங்கும் என உங்களுக்கே தெரியும். பாஜ முதலில் 10 பூத்தில் ஆட்கள் போடுங்கள். அப்புறம் எங்களிடம் போட்டிக்கு வாருங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

Leave a Comment

4 − four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi