வெற்றி தோல்விகளுக்கு மத்தியி லும்,நாம் எப்போதும் உயர்வானவற்றையே எண்ணி முனைப்போடு செயல்பட வேண்டும் என்பதைத்தான் வள்ளுவர், ‘‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல், மற்றது தள்ளினுந் தள்ளாமை நீர்த்து” என்று சொல்லி, நாம் முயலுகின்ற உயர்ந்த இலட்சியங்கள் நம்மை விட்டுத் தள்ளிப்போனாலும், நாம் உயர்ந்த எண்ணங்கள் ஒருபோதும் நம்மை விட்டுத் தள்ளிப்போகக் கூடாது என்று அறிவுறுத்துகிறார்.உயர உயர பறக்கும் கழுகு, கூரிய பார்வையும் தெளிந்த இலக்கும் கொண்டு சாதிப்பதைப் போல நாமும் உயர்ந்த தெளிவான இலக்கை தீர்மானித்து அதை அடைய நேர்மறை எண்ணத்துடன் செயல்பட்டால் சாதிக்கலாம்.இன்றைக்கும் நகரத்தில் இருப்பவர்களில் பலருக்கும், கிராமத்தில் வாழும் மக்களிடம் ஓர் இளக்காரம் இருப்பதைப் பார்க்கமுடியும். இவர் கிராமத்தில் இருந்து வந்தவர், இவருக்கு அதிகம் தெரியாது, நாங்களோ நகரத்துப் பள்ளிகளில் அல்லது கல்லூரிகளில் படித்தவர்கள் எங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணம் இருப்பது உண்மை. ஆனால் கிராமத்து அரசுப் பள்ளியில் தாய்மொழியில் கல்வி கற்றவர்தான் நாம் கொண்டாடும் காலஞ்சென்ற முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள்.
இந்திய குடியரசுத் தலைவர்களிலேயே இந்த அளவுக்குத் தேசம் முழுவதும் பெரும் புகழுடன் வாழ்ந்தவர் வேறு யாருமில்லை என்பதை நிரூபித்து காட்டியவர். அது போல் எண்ணற்ற அறிஞர்கள், ஆட்சியாளர்கள், அரசியலார்கள், அறிவியலார்கள் இன்றைக்கும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஏராளமான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் பலரைச் சொல்லலாம்.நாமும் இவர்களைப் போன்று உழைத்தால், முயன்றால் நிச்சயம் சாதனைகள் படைக்க முடியும்.அந்த வகையில் ஒருவேளை நாம் சமூகத்தால், உற்றார், உறவினர், பெற்றோரால் கூடப் புறக்கணிக்கப்படலாம். ஆனால் உயர்ந்த இலக்கை தீர்மானித்து அதை அடைய என்னால் முடியும். என்னாலும் சாதிக்க முடியும் என எப்போது நம்மை நாம் ஏற்றுக் கொள்கிறோமோ, அப்போதே நாம் சாதனையாளர்கள்தான்.
இன்றைக்கு இளம் வயதில் ஐ.ஏ.எஸ்,ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ் போன்ற பதவிகளைப் பெற்றுள்ள இளம் சாதனையாளர்கள் பலருடைய வாழ்க்கைக் குறிப்புகளை படித்துப் பார்த்தால் இவர்களில் பலர் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால் மாணவப் பருவம் முதல் தங்கள் இலட்சியத்திற்காகவே மனதை மட்டும் இழக்காதவர்கள் இவர்கள். மாணவர்கள் கல்வி என்ற உயர்ந்த இலக்கை நோக்கிச் செல்லும் போது கண்டிப்பாகத் தடைகள் வரும். அந்த தடைகளை எல்லாம் தாண்டிச் செல்லும் போதுதான் ஒரு சாதாரண மாணவர் சாதனை மாணவராக உருவாகிறார். இதற்கு உதாரணமாக இந்த சாதனை மாணவியைச் சொல்லலாம்.ஒவ்வொரு வருடமும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்தும் யுபிஎஸ்சி தேர்வானது நடைபெற்று வருகிறது.இத்தேர்வை லட்சக்கணக்கான மாணவர்கள் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவுடன் எழுதிவருகிறார்கள். ஆனால் கனவு அனைவருக்கும் பலிப்பதில்லை. கடின உழைப்புடன், விடாமுயற்சியுடன் தொடர்ந்து படித்து வருபவர்கள் இத்தேர்வில் சாதனை படைக்கின்றனர்.அத்தகைய சாதனையை நாட்டின் இளம் வயது ஐஏஎஸ் அதிகாரி என்ற பெருமையைப் பெற்று உத்தரப்பிர
தேசத்தைச் சேர்ந்த 22 வயதேயான அனன்யா சிங் என்ற இளம்பெண் சாதித்து உள்ளார்.நாட்டின் உயர் பதவிகளில் முதன்மையானதாக ஐஏஎஸ் பணி கருதப்படுகிறது.இதற்காக நடத்தப்படும் யுபிஎஸ்சி தேர்வு எனும் குடிமைப்பணித்தேர்வு என்பது சவால் நிறைந்தது. குறைந்தபட்சம் மூன்றிலிருந்து நான்கு முறை தேர்வெழுதினால் மட்டுமே இத்தேர்வில் வெற்றி கிடைக்கும் நிலை உள்ளது. அதிலும் யுபிஎஸ்சி வென்றவர்களில் பெரும்பாலோர் பயிற்சி மையங்களுக்கு சென்று பயிற்சி எடுத்து தேர்ச்சி பெறுகிறார்கள்.ஆனால் இவற்றை எல்லாம் தகர்த்து எறிந்து சாதித்து உள்ளார் உத்தர பிரதேசம் பிரயாக்ராஜ் நகரத்தைச் சேர்ந்த அனன்யா சிங் என்ற சாதனைப் பெண்.இவர் ஏற்கெனவே தனது பத்தாம் வகுப்பில் 96 சதவீதம், பன்னிரண்டாம் வகுப்பில் 98.25% வென்று அவற்றுக்கான பொதுத்தேர்வுகளில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தவர்.பள்ளிப்படிப்பை சிபிஎஸ்சிஇ வழிக்கல்வி மூலம் சிறப்பாக ப்படித்து முடித்துவிட்டு டெல்லி ராம் வணிகவியல் கல்லூரியில் பொருளியல் (Economics Honors) பாடப்பிரிவில் பட்டம் பெற்றார்.
சிறுவயதிலிருந்தே கலெக்டர் ஆக வேண்டும் என்று கனவு கண்டார். 2019ம் ஆண்டில் யுபிஎஸ்சி தேர்வெழுத சுயமாகத் தயாரானார். விடாமுயற்சியுடன் தீவிர பயிற்சியை மேற்கொண்டார். முதல் முறையாக யுபிஎஸ்சி தேர்வு எழுத தயாரானார். முதல் முயற்சிலே முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றார் முதல் முயற்சியிலே பிரதான தேர்விலும் தேர்ச்சி பெற்றார். முதல் முயற்சியிலேயே நேர்முகத் தேர்விலும் தேர்ச்சி பெற்று, இளம் வயதில் 22 வயதில் இந்தியாவின் இளம் ஐஏஎஸ் அதிகாரியாகத் தேர்வாகி சாதனை புரிந்துள்ளார் அனன்யா. எந்த ஒரு பயிற்சி மையத்துக்கும் செல்லாமல் சுயமாகப் படித்து இந்த சாதனையைப் புரிந்துள்ளார் அனன்யா.
தற்போது மேற்குவங்கத்தில் பதவி வகித்துவருகிறார். இவருக்கு முன்பாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த அன்சார் ஷேக் என்ற 21 வயது இளைஞர் மிக இளம் வயதில் ஐஏஎஸ் அதிகாரி ஆகி சாதனை புரிந்தார். இருப்பினும் இந்திய பெண்களில் அனன்யா சிங்கின் சாதனை இன்றுவரை யாராலும் முறியடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மிகவும் கடினமான தேர்வாக கருதப்பட்ட யூபிஎஸ்சி தேர்வில் கலந்துகொண்டு என்னாலும் சாதிக்க முடியும் என்று உயர்ந்த இலக்கை தீர்மானித்து முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்று இந்தியாவின் இளம் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வான அனன்யாவின் வாழ்க்கை உயர் அதிகாரியாக வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்க கூடிய ஒவ்வொரு இளம் பெண்களையும் ஊக்கப்படுத்தும் உன்னதப் பாடமாகும்.