சென்னை: தமிழக ஆளுநரை திரும்ப பெறக்கோரி வைகோ அனுப்பிய கடிதம் உள்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குடியரசு தலைவர் செயலகத்தின் துணை செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி, இந்தியக் குடியரசு தலைவருக்கு கோரிக்கை விடுத்து மதிமுக தமிழ்நாட்டு மக்களிடம் நடத்திய கையெழுத்து இயக்கத்தின் மூலம் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெறப்பட்டன. இவற்றை கடந்த 20ம் தேதி, குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் ஒப்படைத்து கடிதம் கொடுத்திருந்தார். நேற்று குடியரசுத் தலைவர் செயலகத்தின் துணைச் செயலாளர், வைகோவுக்கு அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், “தங்களின் கடிதம் பெற்றுக் கொள்ளப்பட்டு, உள்துறை அமைச்சகத்தின் பார்வைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.