Sunday, May 19, 2024
Home » புதுக்கோட்டை வேங்கைவயல் விவகாரத்தில் 4 சிறுவர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய மாவட்ட வன்கொடுமை நீதிபதி உத்தரவு..!!

புதுக்கோட்டை வேங்கைவயல் விவகாரத்தில் 4 சிறுவர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய மாவட்ட வன்கொடுமை நீதிபதி உத்தரவு..!!

by Kalaivani Saravanan

புதுக்கோட்டை: புதுக்கோட்டை வேங்கைவயல் விவகாரத்தில் 4 சிறுவர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய மாவட்ட வன்கொடுமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் இன சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நடந்து இன்றுடன் 204 நாட்கள் ஆகிறது. இந்த விவகாரத்தில் முதலில் தமிழக காவல்துறையினர் 20 நாட்கள் விசாரணை மேற்கொண்டார்கள். இதில் குற்றவாளி கண்டறியப்படாத பட்சத்தில் கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி முதல் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரை 158 சாட்சியங்களிடம் அவர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த வழக்கில் அறிவியல் பூர்வமாக நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டனர். ஏற்கனவே குடிநீர் மாதிரியில் எடுத்த டிஎன்ஏ அடிப்படையில் அந்த பகுதியை சேர்ந்த 110க்கும் மேற்பட்ட நபர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்த திட்டமிட்டனர். அதன் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதி 11 நபர்களுக்கு சம்மன் கொடுத்திருந்தனர். அதன்பிறகு மார்ச் 8ம் தேதி 10 நபர்களுக்கு சம்மன் அளித்திருந்தனர்.

இதுவரை 21 நபர்களுக்கு டிஎன்ஏ மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 10ம் தேதி இறையூர் கிராமத்தை சேர்ந்த 3 சிறுவர்கள், வேங்கை வயல் கிராமத்தை சேர்ந்த ஒரு சிறுவர் என 4 சிறுவர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என புதுக்கோட்டை வன்கொடுமை நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனுத்தாக்கல் செய்திருந்தனர். கடந்த 14ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 4 சிறுவர்களின் பெற்றோர்களும் டிஎன்ஏ மாதிரி பரிசோதனைக்கு சம்மதம் தெரிவிப்பதாக கூறினர்.

தொடர்ந்து இன்று (17.7.23) உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி தெரிவித்திருந்தனர். அதன் அடிப்படையில், புதுக்கோட்டை வேங்கைவயல் விவகாரத்தில் 4 சிறுவர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய மாவட்ட வன்கொடுமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். டிஎன்ஏ பரிசோதனை எப்போது என்பது குறித்து குழந்தைகள் நலக்குழு தலைவரிடம் ஆலோசனை நடத்தலாம். மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், காவல்துறை, சிறுவர்களின் பெற்றோர்கள் அடங்கிய குழு முடிவு செய்யும் என புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி அறிவித்துள்ளார். எப்போது டிஎன்ஏ பரிசோதனைக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்படும் என்ற தேதியை குழு முடிவு செய்யும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

8 − 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi