வேலூர்: வேலூரில் 2வது ஆண்டாக நடைபெற்ற மரபு காய்கறிகள், கிழங்குகள் கண்காட்சியை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் பார்த்து ரசித்தனர். வேலூரில் உள்ள வெங்கடேஷ்வரா மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு விதை சேகரிப்பாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் மரபு காய்கறிகள், கிழங்குகள், கீரை வகைகளின் பிரமாண்ட கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்றது. 2வது ஆண்டாக நடைபெறும் இந்த கண்காட்சியில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களிலிருந்து இயற்கை விவசாயிகள் பங்கேற்றனர். கடந்த முறை இந்த கண்காட்சி நடந்த போது அதற்கு வரமுடியாமல் தவறவிட்டவர்கள் பலர் இந்த முறை காத்திருந்து வந்துள்ளதாக ஆர்வத்துடன் தெரிவித்தனர். வழக்கமாக சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறிகளில் அவற்றின் வகைகள் அதிகம் தெரியாத கிழங்கு வகைகள், கீரை வகைகள் என அனைத்தையும் பார்த்து பொதுமக்கள் வியந்தனர்.
காட்சி படுத்தியது மட்டுமின்றி அவற்றிலுள்ள சத்துக்கள் குறித்தும் அங்கு வந்தவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் 500க்கும் மேற்பட்ட மரபு விதைகளும் காட்சிபடுத்தப்பட்டன. உடல்நலத்திற்காக வெள்ளை அரிசியை பலர் தவிர்த்து வரும் நிலையில் இந்த கண்காட்சியில் கவுனி அரிசி, காட்டுயாணம், எலுப்பைப்பூ சம்பா என வகைவகையாக அரிசி ரகங்கள், சிறுதானியங்கள், மிளகாய் ரகங்கள் என நமது முன்னோர்கள் நினைவாக பயன்படுத்திய பொருட்கள் விற்பனைக்கு கிடைத்தன. செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய் வகைகள் காட்சிப்படுத்தப்பட்டதோடு அவற்றின் நன்மைகளும் விளக்கப்பட்டன. கண்காட்சியில் வைக்கப்பட்ட பல மரபு உணவு பொருட்களை பார்வையாளர்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். மரபு உணவுகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் வகையில் பாரம்பரியமும், ட்ரினிடியான முறையிலும் நடந்த இந்த கண்காட்சியை அனைத்து மாவட்டங்களிலும் நடத்த பார்வையாளர்கள் கோரிக்கை வைத்தனர்.