புதுடெல்லி: சென்னை நெல்லை வழித்தடம் உட்பட 9 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். நாடு முழுவதும் ரயில் சேவையை மேம்படுத்தவும், விரைவுபடுத்தவும் வந்தே பாரத் ரயில் திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. இதன்படி நாட்டின் பல பகுதிகளிலும், பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாடு, ராஜஸ்தான், தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்கம், கேரளா, ஒடிசா, ஜார்க்கண்ட் மற்றும் குஜராத் ஆகிய 11 மாநிலங்கள் வழியாக பயணிக்கும் 9 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைக்கிறார்.
இந்த புதிய வந்தே பாரத் ரயில்கள், நெல்லை மதுரை சென்னை வழித்தடத்திலும், உதய்பூர்- ஜெய்ப்பூர், ஐதராபாத் பெங்களூரு, விஜயவாடா சென்னை (ரேணிகுண்டா வழியாக), பாட்னா ஹவுரா, காசர்கோடு திருவனந்தபுரம், ரூர்கேலா புவனேஸ்வர்-பூரி, ராஞ்சி ஹவுரா, ஜாம்நகர் அகமதாபாத் ஆகிய 9 வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இந்த புதிய ரயில் சேவை மூலம் நெல்லை-சென்னை இடையேயான பயண நேரத்தில் 2 மணி நேரமும், ஐதராபாத் பெங்களூரு இடையேயான பயண நேரத்தில் இரண்டரை மணி நேரமும் குறையும்.
* வந்தே பாரத் ரயிலில் சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு சாதாரண ஏசி சேர் கார் கட்டணம் ரூ.1610 (உணவு, ஜிஎஸ்டி உட்பட) ஆகவும், எக்ஸிகியூடிவ் சேர் கார் கட்டணம் ரூ.3005 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* நெல்லை-சென்னை இடையேயான ரயில் டிக்கெட் முன்பதிவுகள் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது.