சுரண்டை: சுரண்டை காமராஜர் அரசு கலை கல்லூரி, சுரண்டை நாடார் வாலிபர் சங்கம் மற்றும் காமராஜர் அறக்கட்டளை இணைந்து போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் சுரண்டை காமராஜர் கல்லூரியில் நடந்தது. கல்லூரி முதல்வர் சின்னத்தாய் தலைமை வகித்தார். இணை பேராசிரியர் வீரபுத்திரன் முன்னிலை வகித்தார். முனைவர் கிருஷ்ணகுமார் வரவேற்றார். எஸ்.வி.ஜி. அறக்கட்டளை சார்பில் தொழிலதிபர் எஸ்விஜி வெற்றிவேல் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசுகையில், ‘தற்போதைய சூழ்நிலையில் பள்ளி மாணவர்களே போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பது மிகுந்த மன வேதனையை தருகிறது. போதை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களிடம் அறிவுரையாக கூறாமல் உற்ற நண்பன் போல் ஆசிரியர்களும், பெற்றோர்களும் எடுத்துக்கூற வேண்டும். பள்ளி, கல்லூரி அருகில் போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் போதை பொருட்களை பயன்படுத்துவது அவர்களை மட்டுமல்லாது அவர் சார்ந்த குடும்பத்தையே சீரழித்து விடுகிறது. மாணவர்களின் எதிர்கால நலன் கருதி தொடர்ந்து இதுபோன்ற விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்த வேண்டும்’ என்றார். தொடர்ந்து டாக்டர் குமரேசபாண்டியன், டாக்டர் அருள் ஜோதி, காவல் உதவி ஆய்வாளர் சொரிமுத்து ஆகியோர் சிறப்புரையாற்றினர்.