உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே சிலாம்பாக்கத்தில் செய்யாற்றின் குறுக்கே ரூ.35 கோடியில் தடுப்பணை கட்டும் பணி ஜரூராக நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்து தண்ணீர் தேக்கி வைக்கும்பட்சத்தில் விவசாயம் செழிக்கும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளர். உத்திரமேரூர் ஒன்றியத்தில் 73 ஊராட்சிகள் உள்ளன. இங்கு வசிக்கும் பெரும்பாலான கிராமங்களை சேர்ந்தவர்கள் விவசாயம் மற்றும் கால்நடைகளையே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். இங்குள்ள விவசாயிகளுக்கு பாலாறு மற்றும் செய்யாறு போன்றவை நீராதாரமாக விளங்கி வருகிறது.
இந்த ஆறுகளில் இருந்து கால்வாய்கள் மூலம் பெரும்பாலான கிராமங்களில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகளுக்கு மழைநீர் செல்கிறது. அதன் மூலம் தண்ணீர் சேகரிக்கப்பட்டு விவசாய பணிகள் நடக்கிறது. தொடர் மழையின்போது நீர்நிலைகள் முழு கொள்ளவை எட்டினால் முப்போகம் பயிர்கள் விளையும். விவசாயிகள், பெரும்பாலும் நெல், கரும்பு, வேர்க்கடலை உள்ளிட்டவற்றையே பயிரிட்டு வருகின்றனர். தண்ணீர் தட்டுப்பாடு இன்றி கிடைத்தால் விளைச்சல் அமோகமாக இருக்கும். விவசாயிகளும் செழிப்படைவார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் கனமழையின்போது மழைநீர் வீணாக கடலில் கலக்கிறது. அதை தடுப்பதற்காக பாலாறு மற்றும் செய்யாறின் குறுக்கே ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமுக்கூடல், வெங்கச்சேரி ஆகிய பகுதிகளில் தடுப்பணை கட்டப்பட்டது. அதன் மூலம் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு விவசாய பணிகள் நடந்து வருகிறது. அதே போன்று தற்போது உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட சிலாம்பாக்கம் அருகே செல்லும் செய்யாற்றின் குறுக்கே நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.35 கோடியே 21 லட்சம் மதிப்பீட்டில் சிலாம்பாக்கம் முதல் திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் வரையில் புதிய தடுப்பணை கட்டும் பணி கடந்த மே மாதம் தொடங்கியது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த தடுப்பணை கட்டப்படுவதால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிலாம்பாக்கம், வெங்காரம், ஒழுகரை, மாகரல் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் புதுப்பாளையம், அரசாணைபாலை, வயலாத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள நீர்நிலைகள் பாதுகாக்கப்படும். அதே நேரத்தில் அங்குள்ள 1,623.54 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் 132 கிணறுகளில் தண்ணீர் வற்றாமல் இருக்கும் வகையில் இந்த தடுப்பணை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். விவசாயிகளுக்கு சிறப்பு வாய்ந்த இத்தகையை பணியினை விரைந்து முடிப்பதற்கான வேலைகள் நடந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘இந்த தடுப்பணை கட்டப்படுவதால் செய்யாற்றில் வீணாக வெளியேறும் மழைநீர் சேகரிக்கப்படும். இவ்வாறு சேகரிக்கப்படும் மழைநீரால், ஆற்றங்கரையை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்படும். இதனால் ஆற்றை சுற்றியுள்ள கிராமங்கள் எப்போதும் பசுமை மாறாமல் செழிப்பாக இருக்கும். மேலும் விவசாயமும் முப்போகம் நடக்கும். விளைச்சல் அதிகரித்து மகசூல் பெருகும்பட்சத்தில் பொதுமக்களும் மகிழ்ச்சியடைவார்கள். ஏனென்றால் விளைபொருட்களின் விலையும் கட்டுக்குள் இருக்கும். எனவே இந்த தடுப்பணை கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்’ என்றனர்.