உத்திரமேரூர்: உத்திரமேரூரில் ஆனந்தவல்லி நாயக சமேத சுந்தரவரதராஜ பெருமாள் கோயிலில் தெப்போற்சவ விழா நேற்று விமரிசையாக துவங்கியது. விழாவையொட்டி, சுந்தரவரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தபின் பூக்களினால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ஸ்ரீ தேவி – பூதேவியர்களுடன் சுந்தரவரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர், மாட வீதி வழியாக திருவீதியுலா வந்த பெருமாளுக்கு பக்தர்கள் தீபாராதனை காட்டியும், தேங்காய் உடைத்தும் வழிபட்டனர். இதைத்தொடர்ந்து வானவேடிக்கைகளுடன் மேளதாளங்கள் முழுங்க கோயில் குளத்தில் வண்ண மலர்கள் மற்றும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுந்தரவரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி – பூதேவிகளுடன் எழுந்தருளி குளத்தினை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 3 நாட்கள் நடைப்பெறும் இந்த தெப்போற்சவத்தின் முதல் நாளான நேற்று குளத்தினை 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவையொட்டி கோயில் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.