சென்னை: கோட்டூர்புரத்தில் உள்ள தேவாலயத்தில் கள்ளச்சாவி மூலம் ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கோட்டூர்புரம் சர்தார் பட்டேல் சாலையில் ஜெபவீடு என்ற பெயரில் தேவாலயம் அமைந்துள்ளது. இதன் பொருளாளராக உள்ள பென்சன் ஜெயராஜ் (73), நேற்று முன்தினம் இரவு கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், கடந்த 1ம் தேதி தேவாலயத்தில் ஆராதனை முடிந்து காணிக்கையாக வந்த ரூ.9,95,502 பணத்தை, இரவு தேவாலயத்தில் உள்ள அலுவலக பீரோவில் வைத்து பூட்டிவிட்டு, தேவாலய செயலாளர் ஜெயா ஆகியோருடன் வீட்டிற்கு சென்றுவிட்டோம்.
2ம் தேதி காலை மீண்டும் தேவாலய அலுவலகத்தின் கதவை திறக்க சாவியை எடுத்த போது, அலுவலக கதவை யாரோ ஏற்கனவே கள்ளச்சாவி மூலம் திறந்து இருந்தது தெரிந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோவும் கள்ளச்சாவி மூலம் திறக்கப்பட்டு அதில் வைத்திருந்த காணிக்கை பணம் ரூ.9,95,502 மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தோம். எனவே, கள்ளச்சாவி மூலம் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். அதன்பேரில், கோட்டூர்புரம் குற்றப்பிரிவு போலீசார் தேவாலயம் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.