சென்னை: வன்னியர் 10.50% இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எழுதிய கடிதம்: இந்தியா விடுதலையடைந்து 75 ஆண்டுகள் ஆகும் நிலையில், வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் கூட தமிழ்நாடு மாநில பிரிவில் (கேடர்) நேரடியாக இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்படவில்லை அதேபோல், தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் அரசுத்துறை செயலாளர் மற்றும் அதற்கும் கூடுதலான நிலையில் 118 இ.ஆ.ப. அதிகாரிகள் உள்ளனர்.
அவர்களில் ஒருவர் கூட வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பது கவலையளிக்கும் உண்மை. அதேபோல், காவல்துறையில் காவல்துறை தலைவர் (ஐ.ஜி) நிலை மற்றும் அதற்கு மேலான பதவிகளில் ஒருவர் கூட வன்னியர் கிடையாது. நூற்றாண்டுகளைக் கடந்த சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில் இதுவரை வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த இருவர் மட்டும் தான் மூத்த வழக்கறிஞர் என்ற தகுதியை பெற்றுள்ளனர். அதிலும் கூட நடப்பாண்டில் தான் இரண்டாவது வழக்கறிஞருக்கு அந்தத் தகுதி கிடைத்தது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 22 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களில் கடந்த ஆண்டு வரை ஒருவர் கூட வன்னியர் கிடையாது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் வன்னியர் ஒருவர் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். எனவே, தமிழ்நாடு அரசின் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை தொடங்குவதற்கு முன்பாக, தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, வன்னியருக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டு சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றவோ அல்லது அவசர சட்டமாக பிறப்பிக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதன்மூலம் வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.