செய்யூர் அருகே வாகனம் மோதியதில் சேதமான மின்கம்பத்தை மாற்ற வலியுறுத்தல்
செய்யூர்: செய்யூர் அருகே வாயலூர் கிராமத்தில் இருந்து ஆற்காடு வழியாக செய்யூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையை ஒட்டி பல ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இதன் நடுவே பல்வேறு இடங்களில் உயர் அழுத்த மின்கம்பிகள் செல்கின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று சாலையோரமாக வயல்வெளியில் உயரழுத்த மின்கம்பத்தில் மோதியது. இதனால் அந்த மின்கம்பம் உடைந்து, அபாயகர நிலையில் சாய்ந்தபடி நிற்கிறது. இதனால் கம்பிகள் கைக்கு எட்டும் தூரத்தில் உள்ளது. இதனால், அங்கு வயல்வெளியில் வேலைபார்க்கும் தொழிலாளர்கள் மின்கம்பியில் கைதவறி பட்டாலோ, அந்த மின்கம்பம் கீழே விழுந்தாலோ மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்படலாம்.
இதையறிந்த மின்வாரிய ஊழியர்கள், தற்காலிகமாக மின் இணைப்பை துண்டித்தனர். எனினும், அந்த கம்பத்தை மாற்றி சீரமைக்க இதுவரை மின்வாரிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பின்னர், அந்த சேதமான கம்பத்தை மாற்ற, கடந்த சில நாட்களுக்கு முன் புதிய மின்கம்பத்தை சாலையோரத்தில் போட்டுள்ளனர். ஆனால் பழைய கம்பத்தை மாற்றும் பணி நடைபெறவில்லை. அதே நேரத்தில் சாலையோரத்தில் போடப்பட்ட புதிய மின்கம்பத்தினால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயநிலை உள்ளது. எனவே, சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை உடனடியாக மாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.