பேரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மசோதா ஒன்றை நேற்று அறிமுகம் செய்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது: அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களின் பணி ஓய்வு பெறும் வயதை 58ல் இருந்து 60ஆக தமிழ்நாடு அரசு உயர்த்தி உள்ளது. அந்த வகையில், பல்கலைக்கழக பதிவாளர்களின் ஓய்வு பெறும் வயதையும் 58ல் இருந்து 60 ஆக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. அதற்கேற்ற வகையில் பல்கலைக்கழக சட்டங்களை திருத்துவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் சட்டங்களை திருத்துவதற்கு இந்த மசோதா வழிவகை செய்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.