Sunday, September 1, 2024
Home » ஒன்றாத அரசு

ஒன்றாத அரசு

by Karthik Yash

ஒன்றியத்தில் ஆளும் பாஜ அரசு தங்கள் கட்சி ஆட்சி அல்லாத மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துவது மட்டுமின்றி மறைமுக அரசியல் சதி வேலையில் ஈடுபடுகிறது. கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து சித்தராமையா தலைமையிலான ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்று பல்வேறு சூழ்ச்சிகளில் மாநில பாஜ தலைமை ஒன்றிய அரசின் துணையுடன் அரங்கேற்றி வருகிறது. கர்நாடக மாநிலத்தில் இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால் 230 தாலுகாக்கள் வறட்சியின் பிடியில் சிக்கி தவிக்கிறது.

இதை வறட்சி பகுதிகள் என்று அரசு அறிவித்து ஒன்றிய குழு நேரிடையாக பார்வையிட்டு சென்ற பிறகும் இதுவரை வறட்சி நிவாரண நிதியை ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை. பிரதமர் மோடியை முதல்வர் சித்தராமையா நேரில் சந்தித்து வலியுறுத்தியும் எந்த பயனும் இல்லை. உத்தரவாத திட்டங்களை செயல்படுத்த அரசிடம் நிதி இருக்கிறது. வறட்சி பாதித்த பகுதிகளில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நிதி இல்லையா என்று மாநில பாஜ கேள்வி எழுப்பி அரசியல் செய்கிறது. ஆனால் 25 பாஜ எம்பிக்களில் ஒருவர் கூட ஒன்றிய அரசிடம் நிவாரணம் பெற்றுத்தர முன்வராதது ஏன் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்புகிறது.

இந்நிலையில் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு கர்நாடகாவில் இருந்து யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. கர்நாடகாவில் ராமர், அனுமன் வழிபாடு பிரசித்தி பெற்றது. அனுமன் பிறந்த இடமாக கர்நாடகாவும் கருதப்படுகிறது. ஒன்றிய அரசு அயோத்தி ராமர் கோயிலை வைத்து மக்களவை தேர்தலுக்காக அரசியல் செய்கிறது என்று குற்றம்சாட்டிய சித்தராமையா, 140 கோடி மக்களையும் ஒன்றிய அரசு அவமதித்துவிட்டது. அயோத்தி கோயில் இந்துக்கள், ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு மட்டுமே சொந்தமானது போன்று பாஜ சித்தரிக்கிறது.

நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு முழுமையாக கட்டி முடிக்கப்படாத கோயிலை பாஜ திறப்பது வெறும் அரசியல் தான். இவ்விழாவை புறக்கணிப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, கார்கே உள்ளிட்டோர் முடிவெடுத்துள்ளதை வரவேற்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். இதே போன்று துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ராமர் கோயில் திறப்பு விழாவின் போது கர்நாடக அறநிலையத்துறை சார்பில் அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜை, வழிபாடு நடத்தப்படும் என்று தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜவினர், ராமர் கோயில் திறப்பு விழாவில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே காங்கிரஸ் இது போன்று அறிவித்துள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளனர்.

கர்நாடக மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதில் காங்கிரஸ் அரசு கவனம் செலுத்தாமல் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஒன்றிய அரசை குறை சொல்வதிலேயே காலம் கடத்தி வருகிறது என்ற பாஜ விமர்சித்து வருகிறது. ஆனால் எத்தனை முறை கேட்டாலும் வறட்சி நிவாரண நிதியை வழங்காமல் ஒன்றிய அரசு இழுத்தடிக்கிறது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுடன் ஒன்றாமல் இருக்கும் ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது. குடியரசு தினவிழாவில் கர்நாடக மாநிலம் சார்பில் அனுப்பிவைக்கப்பட்ட அணிவகுப்பு ஊர்திக்கு அனுமதி மறுத்துள்ளது. இது குறித்து பாஜ தலைவர்களோ, எம்பிக்களோ கேள்வி எழுப்பாமல் காங்கிரஸ் அரசிடம் குற்றம் கண்டுபிடிப்பதிலேயே குறியாக உள்ளனர். இவர்களின் அரசியல் நாடகத்துக்கு மக்களவை தேர்தலில் வாக்காளர்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று முதல்வர் சித்தராமையா கடுமையாக சாடியுள்ளார்.

You may also like

Leave a Comment

ten + one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi