புதுடெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் எம்பியான மஹூவா மொய்த்ரா அதானி குறித்து கேள்வி எழுப்புவதற்காக லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் கடந்த டிசம்பர் மாதம் அவர் எம்பி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். எம்பி பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து அவருக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவை காலி செய்யும்படி அரசு எஸ்டேட் இயக்குனரகம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. கடந்த 7ம் தேதிக்குள் காலி செய்யும்படியும் அவர் அறிவுறுத்தப்பட்டு இருந்தார். இந்நிலையில் அரசு பங்களாவை காலி செய்யக்கோரியதை எதிர்த்து மஹூவா மொய்த்ரா டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனு விரைவில் விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.