லடாக்: சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரத போராட்டத்தில் பிரகாஷ் ராஜ் கலந்துகொண்டார். பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், நடிகர் பிரகாஷ் ராஜுக்கு நல்ல தோழியாக இருந்தவர். பயங்கரவாத கும்பலால் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து தீவிர அரசியல் நிலைப்பாட்டை எடுத்த பிரகாஷ் ராஜ், பாஜவுக்கு எதிராக குரல் எழுப்பி வருகிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் அவர் பாஜவுக்கு எதிராக கர்நாடகத்தில் போட்டியிட்டார். தொடர்ந்து மோடியை துணிச்சலாக அவர் விமர்சித்து வருகிறார்.
இந்த நிலையில் லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரியும் அரசியல் சாசனத்தில் ஆறாவது அட்டவணையை அமல்படுத்தக்கோரியும் பொறியியலாளர் மற்றும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் நடத்தி வரும் உண்ணாவிரத போராட்டத்துக்கு பிரகாஷ் ராஜ் ஆதரவு தெரிவித்தார். அத்துடன் அந்த போராட்டத்திலும் கலந்து கொண்டு அங்கேயே நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளதாக பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘நமக்காக, நம் நாட்டிற்காக, நமது சுற்றுச்சூழலுக்காக, நமது எதிர்காலத்திற்காக போராடும் லடாக் மக்களுடன் துணை நிற்போம். சோனம் வாங்சுக்கின் போராட்டத்தில் கலந்துகொண்டு எனது பிறந்தநாளைக் கொண்டாடினேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.