கோவை: ‘மண்ணெண்ணெய் ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசை ஒன்றிய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது’ என அமைச்சர் சக்கரபாணி கூறினார். கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன்ஆய்வு கூட்டம் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் தலைமையில் நேற்று நடந்தது. இதில், செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
பின்னர் அமைச்சர் சக்கரபாணி அளித்த பேட்டி: சிறுதானிய உணவு திருவிழா அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட உள்ளது. கியூஆர்கோடு முறையில் ரேஷன் கடைகளில் பொருட்கள் இனி வாங்கலாம். அதற்கான நடவடிக்கை விரைவில் துவங்கும். கோதுமையை பொறுத்தவரை 23 ஆயிரம் மெட்ரிக் என்பதை 8 ஆயிரம் டன்னாக ஒன்றிய அரசு குறைத்து உள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய அரசுடன் நடக்கும் கூட்டத்தில் கூடுதல் ஒதுக்கீடு கேட்க இருக்கிறோம். 15 ஆயிரம் டன் கோதுமை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை அதிகரிக்க ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி இருக்கிறோம். இந்த விவகாரத்தில் தமிழக அரசை ஒன்றிய அரசு தொடர்ந்து வஞ்சிக்கின்றது.
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்குவது அரசின் பரீசிலனையில் உள்ளது. கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் முதல்கட்டமாக தேங்காய் எண்ணெய் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலின் போது, மக்களிடம் இதை சொல்வோம். ரேஷன் கடைகளில் பொருட்கள் தரமாக இருப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ரேஷன் கடைகளில் இரு விதமான அரிசி விநியோகம் செய்யப்பட்டாலும், மக்கள் எந்த அரிசியை விரும்புகின்றனரோ அதை மட்டுமே கொடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.