Tuesday, June 24, 2025
Home செய்திகள்Banner News ஜெகன்மோகன் முகாம் அலுவலகம் இருந்த சாலையில் கட்டுப்பாடுகளை அகற்றி மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நடவடிக்கை

ஜெகன்மோகன் முகாம் அலுவலகம் இருந்த சாலையில் கட்டுப்பாடுகளை அகற்றி மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நடவடிக்கை

by MuthuKumar

திருமலை: முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் முகாம் அலுவலகம் இருந்த சாலையில் தடைகளை அகற்றி மக்கள் பயன்பாட்டிற்கு முதல்வர் சந்திரபாபுநாயுடு திறந்து வைத்தார். ஆந்திர மாநிலம் தாடேபள்ளியில் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி முகாம் அலுவலகம் நடத்தி வந்தார். இந்த அலுவலகம் அமைந்துள்ள தாடேபள்ளியில் இருந்து உண்டவல்லி சாலையில், ஏராளமான வாகனங்கள் சென்று வந்தன. இந்நிலையில் ஜெகன்ேமாகன் முகாம் அலுவலகம் அமைந்த சாலை திடீரென போக்குவரத்து தடை செய்யப்பட்டது. தொடர்ந்து சாலையை அடைத்து ஜெகன்மோகன் பல்வேறு ஏற்பாடுகளை செய்தார்.

சாலையை அகலப்படுத்த தாடேபள்ளியின் அடையாளமாக இருந்த பாரத மாதா சிலையையும் அகற்றினார். அப்போது, ​​சிலையை அகற்ற அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். மேலும், இந்த சாலையை விரிவாக்க கிருஷ்ணா அணைக்கரையோரம் இருந்த நூற்றுக்கணக்கான மக்களின் வீடுகளையும் இடித்துள்ளார். நிலங்களை கையகப்படுத்தியுள்ளார்.

அப்போது, சாலை அமைக்கும் பணியில் வீடு, நிலங்களை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதிலும் பாரபட்சம் காட்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல் ஜெகன்மோகன் அரசால் நியமிக்கப்பட்ட தன்னார்வலராக பணிபுரியும் சிவ என்ற பெண்ணின் வீட்டையும் இடிக்க அதிகாரிகள் வந்தனர். ஆனால் அவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் ஜனசேனா கட்சி தலைவர் பவன்கல்யாணிடம் தனது பிரச்னை குறித்து கூறினார். இதனால் அந்த பெண் தன்னார்வ பணியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் அவரது வீடு ஜேசிபி மூலம் இரவோடு இரவாக இடிக்கப்பட்டது.

நூற்றுக்கணக்கானவர்களின் வீடுகளை அகற்றி கோடிக்கணக்கில் செலவு செய்து சாலை அமைத்த ஜெகன்மோகன், இருபுறமும் லேண்ட்ஸ்கேப்பிங் மற்றும் டிசைனர் விளக்குகளை பொருத்தினார். பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெற்ற இப்பணிகளால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலில் முடிந்து முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்ற நிலையில், ஜெகன்மோகன் அடைத்து வைத்த சாலையை திறக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து சந்திரபாபுநாயுடு உத்தரவின்பேரில் நேற்று அந்த சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது. இதனால் தாடேப்பள்ளி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi