சென்னை: இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமில்லாமல், பிற மதத்தைச் சேர்ந்தவர்களும் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களை பார்க்க வருகின்றனர் என ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டி கூறினார். சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஒன்றிய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி நேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சிறந்த வரலாறு கொண்டது. கோசாலையுடன் கோயில் மிகவும் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு கோயில்களின் மாநிலமாக திகழ்கிறது.
இந்தியா மட்டும் இல்லாமல் வெளிநாட்டவர்களும் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களை பார்வையிட வருகின்றனர். இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமில்லாமல் பிற மதத்தைச் சார்ந்தவர்களும் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களை பார்க்க வருகின்றனர். மற்ற நாடுகளை விட தமிழ்நாடு கோயில் கட்டுமானத்தில் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு மூலையிலும் கோயில்களை முறையாக பராமரித்து வருகின்றனர். இங்கு இருந்த பழங்கால சிலைகள் திருடப்பட்டு வெவ்வேறு நாடுகளில் கிடைத்தன. அந்தந்த கோயில்களில் அவற்றை ஒன்றிய அரசு கொண்டு சேர்த்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கோயில்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு பராமரிக்க வேண்டும். அதன் மூலம்தான் அடுத்த தலைமுறைக்கும் கலாச்சாரத்தை எடுத்துச் செல்ல முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.