காரமடை: புதுமைகளை அங்கீகரித்து வெகுமதி அளிப்பதற்காக ஜனாதிபதி அலுவலகத்தின் முன்முயற்சியாக தேசிய அளவில் சிறந்த கண்டுபிடிப்புகளுக்கான கண்காட்சி கடந்த 8ம் தேதி தொடங்கி இன்று வரை டெல்லி ராஷ்டிரபதி பவன் வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியை குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
இதில் தமிழகத்திலிருந்து கோவை மாவட்டம், சிறுமுகை பகுதியை சேர்ந்த நெசவாளர் காரப்பன் என்பவர் கண்டுபிடித்த ஒற்றை கை, காலால் இயக்கப்படும் நெசவு இயந்திரம் பார்வைக்காக வைக்கப்பட்டது. இந்த நெசவு இயந்திரத்துக்கு விருது வழங்கப்பட்டது. நெசவாளர் காரப்பன் கைத்தறிக்கென்றே கைத்தறிப்பெட்டகம், கைத்தறி களஞ்சியம் உள்ளிட்ட இரு நூல்களை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.