புதுடெல்லி: இந்தாண்டு நாட்டில் கோதுமை உற்பத்தி சாதனை அளவாக 11 கோடியே 20 லட்சம் டன் உற்பத்தி செய்யப்படும் என்று ஒன்றிய உணவு துறை அதிகாரி தெரிவித்தார். ஒன்றிய உணவு துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா கூறுகையில்,‘‘ நாட்டின் சில பகுதிகளில் மோசமான வானிலை நிலவிய போதும், 2022-23ம் ஆண்டு ஜூன் மாதம் வரை நாட்டில் 11 கோடியே 20 லட்சம் டன் கோதுமை உற்பத்தி செய்யப்படும் என நம்புகிறோம். மத்திய பிரதேசத்தில் கோதுமை கொள்முதல் தொடர்பான தர நிர்ணய விதிகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப், அரியானாவிலும் அதே போல் தளர்வுகள் அளிக்கப்படுவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். இந்திய உணவு கழகம் மற்றும் மாநில அரசு நிறுவனங்களின் மூலம் கோதுமை கொள்முதல் செய்யும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது’’ என்றார்.