ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் ரூ.123.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனை, செல்வப்பெருந்தகை எம்எல்ஏ நேரில் ஆய்வு செய்தார். ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் 15 வார்டுகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பேரூராட்சியில், நகர்ப்புற உள்ளாட்சி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.123.75 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம், மெட்ரோ வாட்டர் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அனைத்து வார்டுகளிலும் பாதாள சாக்கடை, மெட்ரோ வாட்டர் திட்ட பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. இந்நிலையில் வடமங்கலம் கூட்டு சாலையில் 8.5 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ரூ.31.6 கோடி மதிப்பில் கட்டபட்டுள்ளது. இதேபோல் என்.ஜி.ஓ., காலனி பகுதியில் ரூ.77.11 கோடி மதிப்பில் கழிவுநீர் உந்து நிலையம், ஏ.எல்.எஸ். நகரில் ரூ.42.20 கோடி மதிப்பில் குடிநீர் பகிர்மான நிலையம் கட்டபட்டுள்ளது. இந்த கட்டிடங்களை நெம்மேலியில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இதனை ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, பேரூராட்சி தலைவர் சாந்தி சதிஷ்குமார், துணைத் தலைவர் இந்திராணி சுப்பிரமணி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் திட்டப் பணிகள் குறித்த கல்வெட்டினை திறந்து வைத்தனர். நிகழ்வின்போது ஸ்ரீபெரும்புதூர் பேரூர் செயலாளர் சதிஷ்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன், இளநிலை பொறியாளர் செண்பகவல்லி, கவுன்சிலர்கள் பிரகாஷ், வீரபத்திரன், சுதாகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.