செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரே உள்ள தனியார் பள்ளி அருகே முதியவர் ஒருவர் உடலில் துணியில்லாமல் மயங்கி கிடந்துள்ளார். இதனை அறிந்த செங்கல்பட்டு நகர காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் நேரடியாகச் சென்று முதியவரை சக காவலரோடு இணைந்து சோப்பு போட்டு குளிப்பாட்டி, முதியவருக்கு புதிய உடுப்பை உடுத்தி பெட்ஷீட் வாங்கிக்கொடுத்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
விசாரணையில் அந்த முதியவர் வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த துரைசாமி என்பவரது மகன் பெருமாள் (92) என்பது தெரிய வந்தது. பெருமாளுக்கு 4 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். இதில் உத்திரமேரூரில் உள்ள ஒரு மகளின் வீட்டுக்கு அவர் சென்று வந்ததாக கூறப்படுகிறது. அவர் எப்படி இந்த பகுதிக்கு வந்தார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் வாலாஜாபாத்தில் உள்ள அவரது மகள்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.