உடுமலை: உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகே பொள்ளாச்சி-பழநி சாலையில் ரவுண்டானா உள்ளது. தினசரி பேருந்து நிலையத்துக்கு நூற்றுக்கணக்கான பேருந்துகள் வந்து செல்கின்றன. அனைத்து நகர, வெளியூர் பேருந்துகள், சரக்கு வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் ரவுண்டானா பகுதியில் சுற்றி பழிநி மற்றும் பொள்ளாச்சி சாலையில் செல்கின்றன.
இந்நிலையில், ரவுண்டானா பகுதியில் பழநி செல்லும் வழித்தடத்தில் புதிதாக ஒரு வழித்தடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட குளறுபடி காரணமாக வாகனங்கள் எளிதில் செல்ல முடியவில்லை. சுமார் 2 கிமீ தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் உடுமலை நகரம் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடும் வெயிலில் காத்திருந்த வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். அவசர கால வாகனங்கள் செல்ல முடியாமல் சிக்கிக்கொள்கின்றன. எனவே, போலீசார் சீரான போக்குவரத்துக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.