நாகப்பட்டினம்: முன்விரோதத்தில் அரசு மருத்துவமனைக்குள் இரு தரப்பினர் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாகப்பட்டினம் அருகேயுள்ள செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பிரவீன் (34). நாகப்பட்டினம் மருந்து கொத்தளம் தெருவை சேர்ந்தவர் சஞ்சய் (32). இவர்களிடையே கடந்த சில மாதங்களாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் (13ம் தேதி) மாலை நாகப்பட்டினம் நல்லியான்தோட்டம் பகுதிக்கு பிரவீன் தனது சகோதரர் காஸ்ட்ரோ(36)வுடன் வந்தார். அப்போது அந்த பகுதியில் சஞ்சய் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார். பிரவீனை, சஞ்சய் தனது நண்பர்களுடன் சேர்ந்த கிண்டல் செய்தார். இதில் இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு பின்னர் மோதலாக மாறியது. கற்களால் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் பிரவீன் சகோதரர் காஸ்ட்ரோ மற்றும் சஞ்சய்க்கு காயம் ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த வெளிப்பாளையம் போலீசார் ரத்தம் சொட்டச் சொட்ட நின்ற காஸ்ட்ரோ, சஞ்சயை நாகப்பட்டினம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காஸ்ட்ரோ, சஞ்சய் ஆகியோரை பார்க்க அவர்களது நண்பர்கள் இரவு 10 மணியளவில் வந்தனர். அப்போது திடீரென மருத்துவமனைக்குள் பிரவீன், சஞ்சய் தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவின் கதவு மற்றும் மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் சேதமடைந்தன. இதனால் அங்கு சிகிச்சையில் இருந்த மற்ற நோயாளிகள் பதட்டம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், இருதரப்பினரையும் அங்கிருந்து வெளியேற்றினர். தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.