மும்பை: லாரி ஓட்டுனர்கள் போராட்டம் எதிரொலியாக பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தால் வாகன ஓட்டுனர்கள் எரிபொருள் நிலையங்களை முற்றுகையிட்டனர். சாலைகளில் விபத்தின்போது உயிரிழப்பை ஏற்படுத்திவிட்டு தப்பியோடும் லாரி ஓட்டுனர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் புதிய சட்டம் ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எரிபொருள் டேங்கர் லாரி ஓட்டுனர்கள் பல்வேறு மாநிலங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற பீதியில், மக்கள் பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களை வாகனங்களுடன் முற்றுகையிட்டனர்.
ஒரேநேரத்தில் வாகனங்களில் எரிபொருள் நிரப்ப லட்சக்கணக்கானோர் திரண்டதால் மராட்டியத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இரவு முழுவதுமாக திக்குமுக்காடின. இந்நிலையில் மராட்டியம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், இமாச்சல உள்ளிட்ட பல மாநிலங்களில் லாரி ஓட்டுனர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல மாநிலங்களில் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழிவதால் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.