சென்னை: பழைய ஓய்வுதிய திட்டம், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.4ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. இதுதொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தை கடந்த டிச.27ம் தேதி சென்னை, தேனாம்பேட்டை, தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் தொழிலாளர் தனி இணை ஆணையர் முன்னிலையில் நடந்தது. அதில் உடன்பாடு எட்டப்படாததால் ஜனவரி 3ல் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று மதியம் 3 மணியளவில் தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் பங்கேற்குமாறு 23 தொழிற்சங்கங்களுக்கும், போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து, தொழிற்சங்க தரப்பில் கூறுகையில், ‘‘இன்று நடக்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்க 23 தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படாவிட்டால் அடுத்தகட்ட போராட்டத்தை முன்னெடுப்போம்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.