Sunday, October 6, 2024
Home » மக்கள் சக்தி

மக்கள் சக்தி

by Ranjith

இப்படி நடக்கும் என்று ஒன்றிய பா.ஜ அரசு ஒருபோதும் நினைத்ததில்லை. நாடாளுமன்றத்தின் இருஅவைகளில் இருந்தும் 146 எம்பிக்களை வெளியேற்றியாகி விட்டது. கேள்வி கேட்க யாரும் இல்லை என்கிற தைரியத்தில் ஆளும் கட்சிக்கு இருக்கிற மிருகத்தனமான பெரும்பான்மையை வைத்துக்கொண்டு இந்திய தண்டனை சட்டங்கள் மாற்றப்பட்டு, புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. நாடாளுமன்றத்தில் அந்த சட்டங்களை நிறைவேற்றி, அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கி, அரசாணை வெளியிட்டு இன்னும் 10 நாட்கள் கூட ஆகவில்லை. அந்த சட்டத்தில் உள்ள ஒருபிரிவை எதிர்த்து வடமாநிலங்கள் கொந்தளித்த நிலையில் உள்ளன.

எப்படி ஒன்றிய அரசு கொண்டு வந்த விவசாயிகள் மசோதா மிகப்பெரிய போராட்டத்திற்கு வழிவகுத்து, ஒருவருடத்திற்கு மேல் டெல்லியை முற்றுகையிட வைத்து உலகம் முழுவதையும், இந்திய விவசாயிகள் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்ததோ அப்படி ஒரு சூழல் அல்ல, அதைவிட பல மடங்கு அதிகமான பதற்ற சூழல் இன்று வடமாநிலங்களில் உருவாகி இருக்கிறது. அதுவும் ஒரேஒரு சட்டப்பிரிவுக்காக இந்த போராட்டம். அந்த சட்டப்பிரிவு என்னவென்றால் வாகனம் மோதி பலியானால் முன்பு இருந்த பழைய தண்டனை சட்டத்தில் அதிகபட்சம் 2 ஆண்டு சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்டில் ஏதாவது ஒன்று விதிக்கப்பட்டு வந்தது.

ஆனால் ஒன்றிய அரசு, அதுவும் அமித்ஷா நாடாளுமன்றத்தில் பெருமிதம் கொண்டு தாக்கல் செய்து, பெருமகிழ்ச்சி தெரிவித்த சட்டத்தில், வாகனம் மோதி பலியான வழக்கில் டிரைவர்களுக்கு இனிமேல் 10 ஆண்டு சிறைதண்டனை மற்றும் 7 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதை அறிந்ததும் வடமாநிலங்களில் உள்ள அத்தனை வாகன ஓட்டிகளும் அதிர்ந்து விட்டார்கள். இப்போது அது ெபரும் போராட்டமாக வெடித்து இருக்கிறது. பஞ்சாப், பீகார், மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், இமாச்சல், சட்டீஸ்கர் உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்கள் முற்றிலும் முடங்கிப்போய் விட்டன.

வடமாநிலங்களில் உள்ள பெட்ரோல் பங்குகளில் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருக்கிறார்கள். விலை ஏற்றம் நடக்கும் என்று எதிர்பார்த்து அல்ல, பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டை தடுக்க மொத்தமாக வாகனங்களில் அவர்கள் பெட்ரோல் நிரப்பி வருகிறார்கள். அகிலஇந்திய பஞ்சாப் லாரிகள் சங்க தலைவர் ஹேப்பி சித்து, ‘‘அமித்ஷா கொண்டு வந்த இந்த பாரதீய நியாய சன்ஹிதா சட்டம் ஒரு கருப்பு சட்டம்’’ என்று கூறியிருக்கிறார். நாடு முழுவதும், குறிப்பாக வடமாநிலங்களில் உள்ள லாரி டிரைவர்கள் போராட்டத்தை அறிவித்து விட்டார்கள்.

இதனால் பல நகரங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. பா.ஜ ஆளும் மபியில் பள்ளிகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. மகாராஷ்டிராவில் தனியார் பள்ளி வாகனங்கள் பெட்ரோல் இருக்கும் வரை இயக்கப்படும் என்று அறிவித்து விட்டன. வட மாநிலங்கள் முழுவதும் அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் நீண்ட வரிசையில் வாகனங்கள் சாலைகளில் அணிவகுத்து நிற்கின்றன.

இதனால் தனி போக்குவரத்து நெருக்கடி உருவாகி விட்டது. பீகார் மாநிலம் பாட்னாவில் டயர்களை எரித்து லாரி உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். லாரி உரிமையாளர்கள் மட்டுமல்ல, கார் டிரைவர்களும் இந்த போராட்டத்தில் குதித்து விட்டனர். எம்பிக்களை கேள்வி கேட்க விடாமல் சட்டத்தை இயற்றிய பா.ஜ அரசு, இப்போது மக்கள் சக்திக்கு முன்னால், அவர்களின் போராட்டத்திற்கு முன்னால் பரிதவித்து நிற்கிறது.

You may also like

Leave a Comment

8 + five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi