கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தமது ஆட்சியை கவிழ்க்க உள்துறை அமைச்சர் அமித்ஷா சதி செய்துள்ளதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்கம் மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற பிரமாண்ட பேரணியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் 35 இடங்களில் பாஜக வெற்றி பெற்றால் போதும், மம்தாவின் ஆட்சி கலைக்கப்படும் என்று எச்சரித்தார்.
மம்தா பானர்ஜி தனது மருமகனை முதலமைச்சராக்கக் கனவு காண்பதாகவும் ஆனால், மேற்கு வங்கத்தின் அடுத்த முதலமைச்சர் பாஜகவை சேர்ந்தவர் தான் என்றும் அமித்ஷா உறுதிப்படத் தெரிவித்தார். இந்நிலையில், என் ஆட்சியை கவிழ்க்க அமித்ஷா சதி செய்வதாக முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியிருக்கிறார். 2024-ல் மக்களவைத் தேர்தலில் மே.வங்கத்தில் 35 இடங்களை பாஜக பிடித்தால், மறு ஆண்டே மம்தா ஆட்சி இருக்காது என்று அமித்ஷா கூறுகிறார். அமித்ஷாவின் பேச்சு அரசியல் சட்டத்துக்கு விரோதமானது; ஆட்சியை கவிழ்க்கும் சதிநோக்கம் கொண்டது என்று மம்தா புகார் தெரிவித்தார். பதவிக் காலம் முடியும் முன்பே திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று அமித்ஷா பேசியிருப்பது ஆணவமிக்கது.
ஒன்றிய அமைச்சர் என்ற முறையில் ஜன நாயகத்தையும், கூட்டாட்சி தத்துவத்தையும் காக்கும் பொறுப்பு அமித்ஷாவுக்கு உள்ளது. அமித்ஷாவின் பேச்சு மேற்குவங்காளத்தில் மாநில அரசை கவிழ்க்க முயற்சிகள் நடைபெறுவதை காட்டுகிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா ரவுடி போல் பேசக்கூடாது. அரசியல் சட்டத்துக்கு விரோதமாக பேசும் அமித்ஷா, ஒன்றிய அமைச்சர் பதவியை விட்டு விலக வேண்டும் என்று மம்தா வலியுறுத்தினார். 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று மே.வங்க முதல்வர் மம்தா அழைப்பு விடுத்துள்ளார்.