திருச்சி: அம்பானி இல்ல திருமண விழாவில் திருட முயன்ற திருச்சி கொள்ளை கும்பலை சேர்ந்த 5 பேரை குஜராத் போலீசார் கைது செய்தனர். முகேஷ் அம்பானி – நீதா அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும், விர்மன் மெர்சண்ட் – ஷைலா மெர்சண்ட் தம்பதியின் மகள் ராதிகா மெர்சண்ட் ஆகியோர் திருமணம் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் கடந்த மாதம் 12ம் தேதி நடைபெற்றது. இதில், இந்தியா, வெளிநாட்டை சேர்ந்த திரைப்பட பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் உள்பட முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த திருமண விழாவில் கொள்ளையடிக்க முயன்று பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக கூறி திருச்சியை சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பலை குஜராத் மாநிலம் ராஜ்கோட் போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, ‘திருச்சியை சேர்ந்த 5 பேர் கொண்ட கொள்ளை கும்பல், ஆனந்த் அம்பானி திருமண விழாவில் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால் அவர்களால் உள்ளே நுழைய முடியவில்லை.
இதையடுத்து ஜாம்நகர் பஸ்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றின் கண்ணாடியை உடைத்து லேப்டாப், ராஜ்கோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த கார் ஒன்றின் கண்ணாடியை உடைத்து ரூ.10 லட்சம், ஒரு லேப்டாப் ஆகியவற்றை திருடி உள்ளனர். இதுதொடர்பாக ராஜ்கோட் போலீசார், கொள்ளையர்களை தேடி வந்த நிலையில் டெல்லியில் 5 பேரையும் கைது செய்தனர்.
இதில், முக்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். பிரபல கொள்ளை கும்பலான இவர்கள், கடந்த 4 மாதங்களில் ராஜ்கோட், ஜாம்நகர், அகமதாபாத் உள்ளிட்ட 11 இடங்களில் கைவரிசை காட்டியுள்ளனர். மேலும், ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது,’ என்றனர்.