Wednesday, May 15, 2024
Home » காதலை கைவிட மறுத்ததால் ஆத்திரம் பிளஸ் 1 மாணவியை அடித்துக்கொன்று ஏரியில் வீச்சு: பெற்றோர் உள்பட 3 பேர் கைது

காதலை கைவிட மறுத்ததால் ஆத்திரம் பிளஸ் 1 மாணவியை அடித்துக்கொன்று ஏரியில் வீச்சு: பெற்றோர் உள்பட 3 பேர் கைது

by Ranjith

ஓசூர்: ஓசூர் அருகே, காதலை கைவிட மறுத்த பிளஸ் 1 மாணவியை அடித்து கொன்று ஏரியில் வீசிய பெற்றோர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பாகலுார் பட்டவாரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த விவசாயி பிரகாஷ் (50). இவரது மகள் ஸ்பூர்த்தி (16). இவர் பாகலுார் அரசு பெண்கள் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இவர் ஓசூர் அருகே முத்தாலி பகுதியைச் சேர்ந்த சிவா (25) என்பவரை, காதலித்து வந்துள்ளார். இருவரும் ஒரே சமூகத்தைச் ேசர்ந்தவர்கள்.

மாணவிக்கு 18 வயது பூர்த்தியாகாத நிலையில், கடந்த 2022ம் ஆண்டு, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, வீட்டிலிருந்து சிவா அழைத்து சென்றார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஓசூர் போலீசார் சிவாவை போக்சோவில் கைது செய்தனர். பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த சிவாவுடன், ஸ்பூர்த்தி காதலை தொடர்ந்து வந்துள்ளார். இதையறிந்த பெற்றோர், மகளை கண்டித்தது தெரிகிறது.

இந்தநிலையில் கடந்த 14ம் தேதி, திடீரென மாணவி மாயமானார். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு, தலையில் பலத்த காயங்களுடன் பட்டவாரப்பள்ளி ஏரியில் மாணவி உடல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தகவலறிந்து சென்ற பாகலூர் போலீசார், மாணவியின் சடலத்தை மீட்டு விசாரணையை முடுக்கி விட்டனர். இதையடுத்து, பட்டவாரப்பள்ளி பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை, பாகலூர் போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில், மாணவி மாயமான தினத்தில், வீட்டிற்கு அருகே உள்ள கண்காணிப்பு கேமராவை மர்ம நபர் ஒருவர், துணி போட்டு மூடியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, மாணவியின் பெற்றோர் பிரகாஷ்- காமாட்சி(35), பெரியம்மா மீனாட்சி(37) ஆகியோரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

இதில், சிவாவை மறக்குமாறு வற்புறுத்தியும் கேட்காமல், அவருடன் சுற்றித் திரிந்ததால் வீட்டில் இருந்த மாணவியை கட்டில் கம்பியால் தலையில் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. தடயத்தை மறைப்பதற்காக சடலத்தை டூவீலரில் ஏற்றிச் சென்று, சுமார் 3 கி.மீ., தொலைவில் உள்ளி ஏரியில் வீசி விட்டு வந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து, மாணவியின் பெற்றோர் மற்றும் மீனாட்சி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

three × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi