திருச்சி: முசிறி அருகே அங்கன்வாடி கட்டிடம் கட்ட தோண்டிய பள்ளத்தில் 6 வயது பெண் குழந்தை விழுந்து உயிரிழந்துள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி அருகே காட்டுப்புத்தூர் பகுதியில் அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்காக தோண்டப்பட்டு இருந்த அஸ்திவார குழியில் 6 வயது பெண் குழந்தை விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முசிறி அருகே உள்ள தொட்டியம் தாலுகா குண்டுமணிப்பட்டியை சேர்ந்தவர் வேதாச்சலம் – கல்பனா தம்பதி. இவர் தச்சு ஆசாரியாகவும், அவரது மனைவி கூலி வேலை செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு 8 வயதில் இந்துஜா என்ற குழந்தையும், 6 வயதில் சஹானா என்ற குழந்தையும் உள்ளனர். இருவரும் குண்டுமணிபட்டி அரசு துவக்கப்பள்ளியில் இந்துஜா 3-ம் வகுப்பும், சஹானா 1-ம் வகுப்பும் படித்து வருகிறார். இந்நிலையில், இன்று காலை வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த சஹானா வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர்களும், உறவினர்களும் தேடியும் சஹானா கிடைக்கவில்லை. எனவே, சஹானா வீடு அருகே அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டப்பட்டு இருந்தது.
அந்த பள்ளத்தில் சஹானா விழுந்திருக்க வாய்ப்புள்ளதாக கருதிய உறவினர்கள் ஒவ்வொரு அஸ்திவார குழிக்குள் தேடியபோது சஹானா சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து, சிறுமியை மீட்டனர். இதுகுறித்து தகவலறிந்த முசிறி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பாதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.