சென்னை: குடியரசுத் தலைவரை பாஜக அவமதித்துள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. துறை மாநில தலைவர் எம்.பி. ரஞ்சன்குமார் குற்றம்சாட்டியுள்ளார். நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானிக்கு வழங்கப்பட்டது. அத்வானியின் வயது மூப்பு காரணமாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, அத்வானியின் வீட்டிற்கே சென்று விருதினை வழங்கினார். இதில் பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பிரதமரும், அத்வானியும் உட்கார்ந்துகொண்டும், குடியரசுத் தலைவர் நின்று கொண்டும் இருக்கிறார்.
இந்த புகைப்படம் வெளியாகி தற்போது கடும் கண்டனங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில், குடியரசுத் தலைவரை பாஜக அவமதித்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. துறை மாநில தலைவர் எம்.பி. ரஞ்சன்குமார் குற்றம்சாட்டியுள்ளார். பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு எதிராக பாஜக அரசு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது என்று ரஞ்சன்குமார் தெரிவித்துள்ளார். பழங்குடியின பெண்ணை குடியரசுத் தலைவராக்கியதாக தம்பட்டம் அடித்துக் கொண்டார்கள்.
போகப் போக பாஜகவினரின் கோர முகமும் உண்மை முகமும் வெளிப்படத் தொடங்கியது. எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருதை குடியரசுத் தலைவரே நேரில் சென்று வழங்கினார். விருது தந்த ஜனாதிபதியை நிற்க வைத்தார்கள், ஆனால் மோடியோ தன் ஆணவத்தை வெளிப்படுத்தும் வகையில் அமர்ந்திருந்தார். பாஜகவுக்கு குடியரசுத் தலைவர் பதவி முக்கியம் அல்ல; அந்தப் பதவியில் யார் அமர்ந்திருக்கிறார்கள் என்பதே முக்கியம் என்று ரஞ்சன்குமார் கடுமையாக சாடியுள்ளார்.