சென்னை: போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிக்கை:
அனைத்து இந்திய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பு ஆண்டுதோறும் போக்குவரத்துக் கழகங்களை ஊக்குவிக்கும் வண்ணம் அவற்றின் செயல்திறன்களை ஆய்வு செய்து விருதுகள் வழங்கி வருகிறது. அதன்படி 2022-23ம் ஆண்டிற்கான தேசிய பொது பேருந்து போக்குவரத்து சிறப்பு விருதுகளில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் 17 விருதுகளுக்கு தேர்வாகியுள்ளது. முதல் பரிசுக்கான 38 பிரிவுகளில் 9 பிரிவுகளிலும், இரண்டாம் பரிசுக்கான 31 பிரிவுகளில் 8 பிரிவுகளிலும் ஆக மொத்தம் 69ல் 17 பிரிவுகளில் பரிசு பெறுவதற்கு தேர்வாகியுள்ளது. இது மொத்த விருதுகளில் 4ல் ஒரு பங்கு ஆகும்.
இதன்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட் 6 விருதுகள் பெற்றிட தேர்வாகியுள்ளது. இதேபோல தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட் 5 விருதுகள் பெற்றிட தேர்வாகியுள்ளது.
வாகன பயன்பாட்டிற்காகவும், பணியாளர் செயல் திறனுக்காகவும் முதல் இடத்திற்கும், பேருந்துகளில் டிஜிட்டல் பரிவர்த்தனைக்காக இரண்டாவது இடத்திற்கும்,அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் 3 விருதுகள் பெற்றிட தேர்வாகியுள்ளது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (சேலம்) 2 விருதுகள் பெற்றிட தேர்வாகியுள்ளது. ஏஎஸ்ஆர்டியூ தள்ளுபடி விலையில் அதிக பொருட்கள் கொள்முதல் செய்ததற்காக முதல் இடத்திற்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிமிடெட் ஒரு விருது பெற்றிட தேர்வாகியுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.