Tuesday, May 21, 2024
Home » ஓ.பி.எஸ் போன்ற துரோகிகளுக்கு அதிமுகவில் கண்டிப்பாக இடமில்லை: அமித்ஷா உடன் சந்திப்புக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி பேட்டி

ஓ.பி.எஸ் போன்ற துரோகிகளுக்கு அதிமுகவில் கண்டிப்பாக இடமில்லை: அமித்ஷா உடன் சந்திப்புக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி பேட்டி

by Ranjith

புதுடெல்லி: ஓ.பி.எஸ் போன்ற துரோகிகளுக்கு அதிமுகவில் கண்டிப்பாக இடமில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி டெல்லியில் வைத்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து பேசினார். இதையடுத்து நேற்று காலை டெல்லியில் உள்ள புதிய தமிழ்நாடு இல்லத்தில் நிருபர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி அளித்த பேட்டியில், ‘அதிமுகவின் தலைமை கழக நிர்வாகிகளுடன் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்தோம். இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு. அப்போது, அனைத்து அம்சங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

2024ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி சீட் ஒதுக்கீடு என்பது குறித்து இப்போது எதுவும் பேசவில்லை. மேலும் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை நாங்கள் சந்தித்தபோது தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையும் உடனிருந்தார். அண்ணாமலைக்கும், அதிமுகவுக்கும் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. நல்ல நட்போடுதான் இருக்கிறோம். எங்களுக்குள் அரசியல் எதிர்ப்பு இருக்கிறது என்று சில தவறான கருத்தை வெளியிட்டு விரிசலை ஏற்படுத்த சிலர் நினைக்கிறார்கள். குறிப்பாக ஒன்றிய அமைச்சரின் அழைப்பின் பேரில் இந்த கூட்டத்தில் அண்ணாமலை கலந்து கொண்டதால் அவரை பற்றி என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம். கூட்டணிக்குள் அனைத்தும் இருக்கும். அதை எங்களுக்குள் பேசி தீர்த்து கொள்வோம். பாஜவுடன் நாங்கள் கூட்டணி வைத்திருந்தாலும் அதிமுகவின் கொள்கையின் அடிப்படையில்தான் பயணிப்போம்.

அதே நேரத்தில் கூட்டணி கட்சியினர் தவறு செய்தால் அதிமுக தட்டி கேட்கும். தேர்தல் ஆணையத்தால் அதிமுக பொதுச் செயலாளராக நான் அங்கீகரிக்கப்பட்டது நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நடந்தது. ஓபிஎஸ் பற்றி அவரிடம் தான் கேட்க வேண்டும். இருப்பினும் அதிமுகவின் கொள்கையை மனரீதியாக ஏற்று தெரியாமல் தவறு செய்துவிட்டு, மனம் திருந்தி வருபவர்களை வேண்டுமானால் கட்சியில் சேர்த்து கொள்வோம். அதில் ஒரு வரையறை உள்ளது. ஆனால் ஓ.பி.எஸ் போன்ற துரோகிகளுக்கு அதிமுகவில் கண்டிப்பாக இடம் கிடையாது. மேலும் அதிமுகவை பொறுத்தவரையில் பொதுக்குழுவுக்குதான் முழு அதிகாரம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

Leave a Comment

one × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi