தமாகா செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கட்சி தலைவர் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் இந்த கூட்டம் நடந்தது. இதில் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள், துணை அமைப்பு தலைவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, தமாகா தலைவர் ஜி.கே.வாசனுக்கு, தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ் மலர் கொத்து கொடுத்து வரவேற்றார். கூட்டத்தில், ஜி.கே.வாசன் பேசியதாவது:
கடந்த 10 வருட காலங்களில் கூட்டணி என்று வந்தாலே நமக்கு பிரசவ வலியாக தான் இருக்கிறது. தமிழகத்தில் என்றாவது ஆளுங்கட்சியாக தமாகா இருக்க வேண்டும். என்னால் ஆழமாக யோசிக்க முடியும். ஜோசியம் போல சொல்ல முடியாது. தேர்தலில் கூட்டணியில் இருப்பதால் நீங்கள் படும் கஷ்டங்களையும், உங்கள் நிலையையும் நான் அறிவேன். கூட்டணியில் இருந்ததால் நாம் சகித்துக் கொண்டு இருந்தோம். நமது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நாம் எடுக்கவேண்டிய சூழல் இது.
பாஜ, அதிமுகவில் உள்ள தலைவர்கள் எனக்கு பழக்கம். இரண்டாம் கட்ட தலைவர்கள் அன்பு வைத்திருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் என் மீது எதிர்ப்பார்ப்பு வைத்திருக்கிறார்கள். ஒரு சீட்டுக்காக கையேந்தும் கட்சி தமாகா இல்லை. வரும் காலம் நமக்கு வசந்த காலமாக இருக்கவேண்டும். இவ்வாறு, ஜி.கே.வாசன் பேசினார். கூட்டத்தில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க, தமாகா தலைவர் ஜி.கே.வாசனுக்கு முழு அதிகாரம் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.