திருமங்கலம்: சென்னையை சேர்ந்த குடும்பத்தினரை கப்பலூர் டோல்கேட் ஊழியர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த பிரபு மற்றும் அவரது குடும்பத்தினர் சுற்றுலா சென்றுவிட்டு, நேற்று சென்னை திரும்பி கொண்டிருந்தனர். திருமங்கலம் அருகே கப்பலூர் டோல்கேட்டுக்கு பிரபு வந்தார். அப்போது, பாஸ்ட் டேக் மூலம் கட்டணம் எடுக்கப்பட்டும், வெகு நேரம் கேட் திறக்கப்படாமல் அவரது கார் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதை பிரபு தட்டிக்கேட்டுள்ளார். பின்னர் காரை எடுக்க முற்பட்டபோது, டோல்கேட் பெண் ஊழியர் ஒருவர், பிரபுவை திட்டி வாகனத்தை நிறுத்துமாறு அங்கிருந்த ஊழியர்களிடம் கூறியுள்ளார். அப்போது திடீரென டோல்கேட் ஊழியர்கள் பிரபுவை சூழ்ந்து சரமாரியாக தாக்கினர். இதை தடுக்க முற்பட்ட அவரது குடும்பத்தார் மீதும், பெண் ஊழியர் உட்பட 4 பேர் சேர்ந்து தாக்கியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. தகவலறிந்த திருமங்கலம் போலீசார் வந்து, பிரபு குடும்பத்தாரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பிரபு மீது நடந்த தாக்குதல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.