சேலம்: இரண்டாயிரம் ரூபாய் நோட்டு திரும்ப பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்த பிறகு தங்கத்தில் முதலீடு செய்ய மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிகளவில் நகைக்கடைகள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய, பெரிய நகைக்கடைகள் உள்ளன. இந்த கடைகளில் நாள் ஒன்றுக்கு பல கோடி மதிப்பிலான தங்க நகைகள் விற்பனையாகிறது. தங்கத்தை பொருத்தமட்டில் தினசரி விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. கடந்த 2007க்கு முன்பு ஒரு பவுன் ரூ.5,500க்கு விற்றது. அதன்பின், தங்கம் மற்றும் வெள்ளி ஆன்லைன் வர்த்தகத்தில் கொண்டு வரப்பட்டது. பின்பு, தங்கத்தின் விலை அதிகரிக்கத் தொடங்கியது. 2011ல் பவுன் ரூ.18 ஆயிரம் என அதிகரித்தது. 2012ல் ரூ.24 ஆயிரம் வரை உயர்ந்தது. கடந்த 2020 கொரோனாவுக்கு முன்பு ரூ.28 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் என கூடியது. கொரோனாவுக்கு பின்பு ரூ.45 ஆயிரம் வரை சென்றது. கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு பவுன் ரூ.46 ஆயிரம் வரை சென்றது. விலை அதிகரிப்பால் மக்கள் தங்கம் வாங்குவதை குறைத்துக்கொண்டனர். இதன் காரணமாக மார்ச், ஏப்ரல் 15ம் தேதி வரை தங்கத்தின் விலை 20 முதல் 30 சதவீதம் சரிந்தது. தற்போது முகூர்த்த மாதம் என்பதால் மணப்பெண்ணுக்கு தேவையான தங்கத்தை பெற்றோர் வாங்கி வருகின்றனர்.
இதனால் ஏப்ரல் 15ம் தேதிக்கு மேல் தங்கத்தின் விற்பனை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், கடந்த 19ம் தேதி ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டு திரும்ப பெறப்படும் என்று அறிவித்தது. ரூ.2000 நோட்டு வைத்திருக்கும் மக்கள் வங்கியில் டெபாசிட் செய்து கொள்ளலாம் அல்லது அங்கு கொடுத்து வேறு பணத்தை வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. இதற்கு எந்த ஆவணமும் தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ரூ.2000 நோட்டு திரும்ப பெறப்படும் என்ற அறிவிப்புக்கு பிறகு தங்கத்தில் முதலீடு செய்ய மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் கடந்த இரு நாட்களாக நகைக்கடைகளில் வழக்கத்ைத காட்டிலும் தங்கம் விற்பனை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து சேலத்தை சேர்ந்த நகைக்கடை வியாபாரிகள் கூறியதாவது: சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய, பெரிய நகைக்கடைகள் உள்ளன. இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.10 கோடி அளவில் நகைகளின் விற்பனை இருக்கும்.
மார்ச் 15 முதல் ஏப்ரல் 15 வரை மட்டும் தங்கத்தின் விற்பனை குறைந்தது. ரூ.2,000 நோட்டு திரும்ப பெறப்படும் என்ற அறிவிப்புக்கு பிறகு ரூ.2,000 ேநாட்டை மக்கள் வெளியில் கொண்டு வரத் தொடங்கியுள்ளனர். தங்கத்தில் முதலீடு செய்ய மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தங்கம் வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம் நாங்கள் ரூ.2,000 ேநாட்டு வேண்டாம் என்று கூறுவதில்லை. அரசு நிர்ணயித்த தொகைக்கு மேல் ரூ.2,000 நோட்டு கொண்டு வந்தால் மட்டுமே ஆதார் கார்டு நகல் பெற்றுக்கொள்கிறோம். ஏற்கனவே முகூர்த்தம் நேரம் என்பதால் விற்பனை நல்லமுறையில் உள்ளது. இரண்டாயிரம் நோட்டு திரும்ப பெறப்படும் என்ற அறிவிப்புக்கு பிறகு நகை விற்பனை 20 முதல் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.