சென்னை: தியாகராயநகர் பகுதி முழுவதும் தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பிரசாரம் முடிவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். தொகுதி முழுவதும் உதயசூரியன் சின்னத்துக்கு ஆதரவு கேட்டு வீடு வீடாகவும், வீதி வீதியாகவும் சென்று ஆதரவு திரட்டி வருகின்றனர். வீதி, வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வரும் தமிழச்சி தங்கப்பாண்யடின், தற்போது நவீன தொழில்நுட்பங்களையும் பிரசாரத்தில் பயன்படுத்த தொடங்கியுள்ளார்.
பிரசாரத்தில் ஈடுபடும் தமிழச்சி தங்கப்பாண்டியன் மக்களுடன் மக்களாக உணவு சாப்பிடுவது, தெரு பிரசாரத்தின் போது கடைகளில் கூழ் குடிப்பது, மீனவர்களுடன் கூழ் குடிப்பது, பூங்காங்களில் நடைபயணம் மேற்கொண்டு பொதுமக்கள் கொடுக்கும் உணவுகளை சாப்பிடுவது என மக்களோடு மக்கள் களத்தில் நின்று பழகி வருவதால் எங்கு சென்றாலும் பொதுமக்கள் அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
தென் சென்னைக்கு உட்பட்ட பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்ட மக்களிடம் கலந்துரையாடி தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இதையடுத்து தியாகராய நகர் பகுதி முழுவதும் எம்எல்ஏ கருணாநிதி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் திமுக இளைஞரணி நிர்வாகிகளுடன் பேரணியாக சென்று வாக்கு சேகரித்தார்.