வாஷிங்டன்: அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்வையிடுவதற்காக சென்று காணாமல்போன நீர்மூழ்கி கப்பலை தேடும் பணியில் மேலும் 3 நீர்மூழ்கி கப்பலை ஈடுபடுத்தியிருப்பதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. 1912ம் ஆண்டு டைட்டானிக் சொகுசு கப்பல் அட்லாண்டிக் கடலில் பனிமலையில் மோதி மூழ்கியதில் 1600 பேர் பலியாகினர். மூழ்கிய டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களை சிறிய வகை நீர்மூழ்கி கப்பலில் சென்று சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர். இதேபோன்று டைட்டானிக்கை பார்வையிட கடந்த ஞாயிறு காலை 5 சுற்றுலா பயணிகளை அழைத்துச்சென்ற டைட்டன் என்ற சிறிய வகை நீர்மூழ்கி கப்பல், வடக்கு அட்லாண்டிக் கடலில் திடீரென காணாமல் போனது.
இதனையடுத்து அதனை தேடும் பணியில் 4வது நாளாக அமெரிக்கா மற்றும் கனடாவின் கடற்படை கப்பல்கள் மற்றும் விமானங்கள் ஈடுபட்டுள்ளன. இதனிடையே தேடுதல் பணிகளில் மேலும் 3 நீர்மூழ்கி கப்பல்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அமெரிக்க கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர். குறைவான ஆக்சிஜன் மட்டுமே இருப்பு உள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது. நீர்மூழ்கியில் இருந்த 5 சுற்றுலா பயணிகளின் நிலை என்ன? என்பது கேள்விக்குறியாகியுள்ளது.