திருவொற்றியூர்: திருவொற்றியூர் சர்வீஸ் சாலை வழியாக மீண்டும் பேருந்துகள் இயக்க கோரி, பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவொற்றியூர் பக்கிங்காம் கால்வாய் சர்வீஸ் சாலை வழியாக கடந்த 5 ஆண்டுகளாக மாநகர பேருந்து இயக்கப்பட்டு வந்தது. பக்கிங்காம் கால்வாயை ஒட்டியுள்ள ராஜாஜி நகர், கார்கில் நகர், வெற்றி விநாயகர் நகர் போன்ற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த பேருந்து சேவையை பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் பக்கிங்காம் கால்வாய் மீது கட்டப்பட்டு வந்த உயர்மட்ட மேம்பாலம் கடந்த மாதம் திறக்கப்பட்டது. இதனால் பக்கிங்காம் கால்வாய் சர்வீஸ் சாலை வழியாக சென்று கொண்டிருந்த பேருந்துகள், அந்த வழியாக செல்லாமல் தற்போது மேம்பாலம் வழியாக மணலிக்கு சென்று வருகிறது. இதனால் மேற்கண்ட பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள், பக்கிங்காம் கால்வாய் சர்வீஸ் சாலை வழியாகவே மீண்டும் மாநகர பேருந்துகளை இயக்க வேண்டும் என வலியுறுத்தி புதிய மேம்பாலம் அருகே நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவொற்றியூர் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.