காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஒன்றியம், திருப்புக்குழி ஊராட்சியில் ரூ.132.78 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிட பணி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செயல்பட்டு வரும் சித்த மருத்துவ பிரிவு, பல் சிகிச்சை பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, ஸ்கேன், எக்ஸ்ரே, பிரசவ அறை, அறுவை சிகிச்சை அறை, உள் நோயாளிகள் பிரிவு போன்றவற்றை கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேரில் பார்வையிட்டு, அவைகளின் செயல்பாடுகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
இதனைத்தொடர்ந்து, திருப்புக்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.93.99 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் பள்ளி கட்டிடத்தை ஆய்வு செய்து, பள்ளியில் உள்ள தொழில்நுட்ப வகுப்பறையினை பார்வையிட்டு, மாணவ – மாணவிகளின் கற்றல் திறனை கேட்டறிந்தார். பின்னர், மாணவர்களுக்காக பள்ளியில் சமைக்கப்படும் மதிய உணவின் தரத்தினை ஆய்வு செய்தார். இதனையடுத்து, திருப்புக்குழி பெருமாள் கோயில் தெருவில் ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்டுள்ள சிசி சாலையினையும், புதூரில் ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில் 3மீ தூரத்தில் சிமென்ட் கான்கிரீட் பாலம் கட்டும் பணியினையும் பார்வையிட்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2023-24 கீழ், அண்ணா நகர் குறுக்கு தெருவில் ரூ.9.35 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்டுள்ள சிசி சாலையினையும் ஆய்வு செய்தார்.
மேலும், முசரவாக்கம் ஊராட்சியில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் கீழ் நடைபெற்று வரும் வீட்டு வசதி குடியிருப்பினையும் பார்வையிட்டு, அயோதிதாசர் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டம் 2023-24 கீழ், ரூ.6.30 லட்சம் மதிப்பீட்டில் மாணிக்கம் நகரில் போடப்பட்டுள்ள சிமென்ட் கான்கிரீட் சாலை மற்றும் பிள்ளையார் கோயில் தெருவில் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்டுள்ள சிமென்ட் கான்கிரீட் சாலையையும் பார்வையிட்டு ஆய்வு செய்
தார். இதனையடுத்து, முசரவாக்கம் ஊராட்சியில் ரூ.35.45 லட்சம் மதிப்பீட்டில் பெரிய ஏரி வரத்துக்கால்வாய் மற்றும் ரூ.36.36 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மூலம் 1600மீ ஓடை கால்வாய் ஆழப்படுத்தும் பணியினையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.