திருப்போரூர்: நாவலூரில் நடிகர் ரஜினிகாந்த் சொத்து வாங்கினார். அதை, திருப்போரூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் இன்று பதிவு செய்தார். சென்னை அருகே நாவலூர் கிராமம், தாழம்பூர் சாலையில் ஒரு தனியார் கிரானைட் நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தை நடிகர் ரஜினிகாந்த் வாங்கியுள்ளார். அந்த நிலத்தை அவரது பெயரில் பதிவு செய்வதற்காக திருப்போரூர் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு இன்று காலை 9.45 மணிக்கு நடிகர் ரஜினிகாந்த் காரில் வந்தார். அவரை செங்கல்பட்டு மண்டல பத்திரப்பதிவு டிஐஜி ராஜ்குமார், மாவட்ட பதிவாளர் அறிவழகன், சார்பதிவாளர் சக்திபிரகாஷ் ஆகியோர் வரவேற்றனர்.
தொடர்ந்து, பத்திரப்பதிவு அலுவலகத்தில் ரஜினி பெயரில் வாங்கப்பட்ட சொத்து ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டன. மேலும், அவரது புகைப்படம் மற்றும் கைரேகை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்பட்டது. இந்த பணிகள் முடிந்ததும், காலை 10.30 மணியளவில் ரஜினிகாந்த் காரில் புறப்பட்டு சென்றார். அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த ரஜினியுடன் பலர் புகைப்படம் எடுக்க முண்டியடித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.