திருமலை: திருப்பதியில் ஓட்டுக்கு பணம் பெற்றவர்களிடம் கற்பூரத்தின் மீது ஆளும் கட்சியினர் சத்தியம் செய்ய வைத்தனர். ஆந்திர மாநிலம், திருப்பதி சட்டப்பேரவை தொகுதி பரபரப்பாக காணப்படுகிறது. இந்த தொகுதியில் 46 சட்டமன்ற வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் அபினய்யும், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜனசேனா கூட்டணி வேட்பாளர் ஆரணி சீனிவாசலுவும் போட்டியில் உள்ளார். இந்த தேர்தலில் இருவரும் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஒஎஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நகர கூட்டுறவு வங்கி தலைவர் ஜெயச்சந்திரா முன்னிலையில் திருப்பதி கொரலகுண்டாவில் உள்ள ஆஞ்சநேய சுவாமி கோயிலில் கற்பூரம் ஏற்றி வங்கியில் கடன் பெற்றவர்கள் மற்றும் ஓட்டுக்கு பணம் பெற்ற வாக்காளர்களிடம் கற்பூரத்தின் மீது சத்தியம் செய்ய சொல்லி தனது வாக்குடன் குடும்பத்தினர் வாக்குகளையும் ஒஎஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் பேன் சின்னத்திற்கு வாக்களிப்பதாக உறுதி ஏற்க வைத்துள்ளனர். இந்த வீடியோ வைரலாக பரவி உள்ள நிலையில் நகர கூட்டுறவு வங்கி தலைவர் ஜெயச்சந்திர மீது நடவடிக்கை எடுக்க கோரி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.