திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வரும் நிலையில், வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் கூடுதல் எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் 66 ஆயிரத்து 590 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இவர்களில் 31 ஆயிரத்து 52 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று முன்தினம் இரவு எண்ணப்பட்டது. அதில், ரூ.3.37 கோடி காணிக்கையாக கிடைத்தது.
நேற்றைய நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு பகுதியில் உள்ள 9 அறைகளில் பக்தர்கள் சுமார் 10 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும், ரூ.300 டிக்கெட் பெற்றவர்கள் 2 மணிநேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசித்தனர். இன்று பிரமோற்சவம் மற்றும் புரட்டாசி மாதம் தொடங்குவதால் இனி வரும் நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.