திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தங்கத்தால் ஆன அபிஷேக சங்கு மற்றும் ஆமை போல வடிவமைக்கப்பட்ட சக்கரம் ஒன்றை பக்தர் ஒருவர் தானமாக வழங்கியுள்ளனர். திருப்பதி வெங்கடாஜலபதி ஆலயம் உலகப் புகழ் பெற்றது. திருப்பதி பெருமாள் தான் உலகிலேயே மிகவும் பணக்காரக் கடவுள் என்ற பெருமை பெற்றவர். திருப்பதி தேவஸ்தானம், கோவிலின் தினசரி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. திருப்பதி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் நிலம் மற்றும் பொருட்களை தானமாக வழங்குவார்கள்.
இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இன்ஃபோசிஸ் தலைவர் நாராயண மூர்த்தி மற்றும் அவரது மனைவி சுதா மூர்த்தி ஆகிய இருவரும் தங்கத்தால் ஆன அபிஷேக சங்கு மற்றும் ஆமை போல வடிவமைக்கப்பட்ட சக்கரம் ஒன்றை தானமாக வழங்கியுள்ளனர். முன்னதாக ஏழுமலையானை தரிசனம் செய்த நிலையில் அவர்களுக்கு வேத மந்திரங்கள் முழங்க பிரசாதம் வழங்கப்பட்டது. அபிஷக சங்கு, சக்கரத்தின் எடை குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டபொழுது கடவுளுக்கு காணிக்கையாக கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், அதற்கு விடை கிடையாது என்று சுதா மூர்த்தி பதில் அளித்தார்.